திங்கள், மே 20, 2013

நாற்பது வயது ஆகிவிட்டதா..? (கவிதை)

காலமெனும் பாதையிலே
நாற்பதினை அடைந்தாய்
கடந்து வந்த பாதையினை
கண்ணெடுத்தே பாராய்!
 
பாதிவழி வந்த பின்னர்
பாதையினை மறந்தாய்
பழகிவிட்ட நட்புகளைப்
பழுதெனவே மறந்தாய்

கண்களிலே சேர்த்துவைத்த
கனவுகளை இழந்தாய்
கைகளிலே அள்ளிவந்த
கற்பனையில் மிதந்தாய்

நூறுமலர் தேடியுறும்
வண்டெனவே பறந்தாய்
நோய்பிடித்த தென்றலெனும்
வாழ்வினிலே உழன்றாய்

சோம்பலிலே திரிந்து மனம்
சோர்ந்தழும் வீண் மனிதா,
தூங்கியது போதும் இனி
துள்ளி எழு, விரைவாய்!

இறுதி மூன்று ஓவர்களில்
எழுபது ரன் வேண்டும்-
என்பதுபோல் வேகமுடன்
இயங்கிடவே வா வா!

ஊர்வலத்தில் முதல்வனென
ஓங்கி நடை போட்டால்
உன்சுற்றம் நட்புகளும்
உனைத் தொடர்வார் அன்றோ?

நாற்பது தான் நமக்கெல்லாம்
நல்ல சுமை தாங்கி!
நடுவில் கொஞ்சம் இளைப்பாறித்
தொடர்ந்திடுவோம் பயணம்!
   -    கவிஞர் இராய. செல்லப்பா.

© Y.Chellappa
email: chellappay@yahoo.com

5 கருத்துகள்:

  1. Cricket-யும் இணைத்தது அருமை...

    நன்றி சொல்லும் வயது... நன்றி...

    தொடர வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. சோம்பலிலே திரிந்து மனம்
    சோர்ந்தழும் வீண் மனிதா,
    தூங்கியது போதும் இனி
    துள்ளி எழு, விரைவாய்!
    .....
    உணர்வு முறுக்கேற்றும்
    வரிகள் அய்யா.நன்றி

    பதிலளிநீக்கு
  3. பாதிவழி வந்த பின்னர்
    பாதையினை மறந்தாய்
    பழகிவிட்ட நட்புகளைப்
    பழுதெனவே மறந்தாய்

    அழகாகச் சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு