சிறுவன்(அண்ணன்):
பொழுதும் இன்னும் விடியவில்லை,
எழுப்பி விட்டார்கள்!
பொங்கும் எண்ணெய்க் குளியலிலே
மூழ்க டித்தார்கள்!
இன்னும் கொஞ்சம் தூங்க வேண்டும்
அனுமதி யில்லை!
என்னடா இது பண்டிகையாம்,
எனக்குப் பிடிக்கலை!
சிறுமி(தங்கை):
இரண்டு மணிக்கே எழுந்து விட்டேன்,
எண்ணெயில் குளித்தேன்!
புதிய ஆடை புனைந்து விட்டேன்,
பாராய் என்னை!
வீதி எங்கும் சிறுவர் கூட்டம்!
விரைந்து வா அண்ணா!
வெடிவெடிக்கக் காத்தி ருக்கேன்,
சோம்பேறி அண்ணா!
சிறுவன்(அண்ணன்):
அடுத்த வீட்டு அரவிந்தன்
எழுந்து விட்டானா?
அடுக்கடுக்காய்ச் சரவெடிகள்
வெடித்து விட்டானா?
சிறுமி(தங்கை):
அரவிந் தன் மட்டுமல்ல,
அகிலா, சீதா,
அநிருத்தும் வீதியில் தான்!
அழைக்கின் றார், வா!
சிறுவன்(அண்ணன்):
அப்படியா, இதோ வந்தேன்,
அம்மா, அம்மா!
ஆடைகளைக் கொண்டுவா,
நேர மாகுதே!
அம்மா:
ஆமாண்டா, சோம்பேறி,
என்னைச் சொல்கிறாய்!
அவசரமாய் உடுத்திக்கொள்,
இந்தா பட்டாசு!
சிறுமி(தங்கை):
அண்ணா அண்ணா வாவா வா
ஆரம் பிக்கலாம்!
அழகுக் கம்பி மத்தாப்புடன்
சாட்டை, சட்டியும்
சக்கரமும் மாத்திரையில்
பாம்பும் எழுப்பலாம்!
சத்தமின்றிப் பூவாணம்
சுட்டுத் தள்ளலாம்!
சிறுவன்(அண்ணன்):
அத்தனையும் உனக்குத் தான்!
வெடிகள் மட்டுமே
அடுக்கடுக்காய் நான் வெடிப்பேன்
அஞ்சிட மாட்டேன்!
அம்மா, அப்பா:
தாத்தாவையும் கூப்பிடுங்கள்
பாட்டியும் வரட்டும்!
தீபாவளி ஆனந்தத்தைப்
இரசித்திட வரட்டும்!
இல்லந்தோறும் வெளிச்சமாகி
இருட்டு மறையட்டும்!
ஒளிகாட்டும் வழியினிலே
உலகம் சிரிக்கட்டும்!
-
கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்)
(நண்பர் ரூபன் அவர்களே? இப்போது மகிழ்ச்சி தானே?)