வெள்ளி, ஜனவரி 10, 2014

இப்படியும் ஒரு நண்பர்!

இன்று முகநூலைச் சொடுக்கியபோது திடீரென்று ஓர் ஆச்சரியம்.. புதுதில்லியிலிருந்து எனது நண்பர் ஷாஜகான் எழுதிய நீண்ட குறிப்பு ...இதோ கீழே தருகிறேன்:

நினைவுகளின் அடிச்சுவட்டில்...

1990களின் துவக்கம். தில்லிக்குக் குடிபெயர்ந்து தமிழ்ச்சங்கத்தோடு இணைந்து, இளமை வேகத்துடன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த காலம். இன்று அரசுப் பணிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட பலர் கவிஞர்களாகவும் எழுத்தாளர்களாகவும் விமர்சகர்களாகவும் தீவிரமாக இலக்கியவட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த காலம். சொந்தக் கலையரங்கம் இல்லாதபோதே மாதம் தவறாமல் கவியரங்குகளை நடத்திக் கொண்டிருந்த காலம். நான் கவிதை வாசிக்கிறேன் என்பதற்காகவே ரசிகர்கள் கரோல்பாகிலிருந்து பஸ் பிடித்து வந்து கொண்டிருந்த காலம்...

அப்போதுதான் அறிமுகமானார் ஒருவர். கார்ப்பரேஷன் வங்கியில் மேலாளர். கரோல்பாகில் அலுவலகம். அப்போது நானும் தில்லிக்குப் புதிதாக வருபவர்களின் விருப்பத் தேர்விடமாக இருந்த கரோல்பாகில் குடியிருந்தேன். சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் காஜியாபாதில் கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரியாக வங்கிக் குடியிருப்பில் வாசம் செய்தார். என்னைவிட ஆறேழுவயது மூத்தவர். 

கவியரங்குகளின்மூலம் அறிமுகமாகி, எப்போது எப்படி நெருங்கிய நட்பு உருவானது என்பது தெரியவில்லை. மாலை வங்கி முடிந்ததும் என் ஸ்கூட்டரில் ஏறிக்கொண்டு அவர் குடியிருப்புக்குப் போவோம். மறுநாள் காலை வங்கிக்கு வந்தபிறகு மாலையில் அவர் என் வீட்டுக்கு வந்து தங்கிவிடுவார். இலக்கியம், அரசியல், பொருளாதாரம் என்று எங்கள் உரையாடல்கள் விரியும். 

வங்கித்தொழிலில் நிபுணர் என்பதால் பங்குச் சந்தை குறித்தும் நிறையவே தெரிந்து வைத்திருந்தார். “யோவ்... நான் உமக்கு 5000 ரூபாய் லோன் வாங்கித் தாரேன். நீரும் ஸ்டாக் மார்க்கெட்ல இறங்குமய்யா... உமக்கு இருக்கிற அறிவுக்கு நல்லாவே சம்பாதிக்க முடியும்” என்று பலநாட்கள் வற்புறுத்தி வந்தார். வீட்டில் காலையில் வந்துவிடும் டைம்ஸ் ஆப் இந்தியாவை வைத்துக்கொண்டு முந்தைய நாளின் நிலவரத்தோடு ஒப்பிட்டு சொல்லிக் கொடுப்பார். மணிக்கணக்கில் பங்குச்சந்தை ஆராய்ச்சி நடக்கும். அப்போது 5000 என்பது மிகப்பெரிய தொகை. ஆனால் எனக்கு பங்குச்சந்தை என்பது எப்போதுமே சூதாட்டமாகவே பட்டதால் கடைசிவரை அதைச் செய்யவில்லை. 

பல ஆண்டுகள் தலைநகரில் வெளிவந்து கொண்டிருந்த உதயம் என்னும் கையெழுத்துப் பிரதிக்கு அவரும் கவிதைகள் எழுதுவார். திடீரென்று அவருக்கு ஓர் ஆசை வந்தது. தில்லிக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பைக் கொண்டுவர வேண்டும் என்ற விபரீத ஆசை. தெரிந்தவர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி, ஸ்பான்சர்களைப் பிடித்து, தலைநகரில் தமிழ்க் குயில்கள் என்ற தொகுப்பையும், அவருடைய ஒரு கவிதைத் தொகுப்பையும், ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தியின் சிறுகதைத் தொகுப்பையும் தானே கொண்டு வந்தார். அவற்றை தீபம் திருமலையின் உதவியால் அச்சிட்டு தமிழகத்தில் பரவச்செய்தார். தில்லிக் கவிஞர்களின் படைப்புகள் நூலாக வெளிவந்தது அதுவே முதலும் கடைசியும்.

அவரால் யாருடனும் மிக எளிதாக நட்புக்கொண்டுவிட முடியும். மனதால் இளைஞர் என்பது இன்னும் வசதியாக இருந்தது எங்கள் நட்பு வலுப்படுவதற்கு. ஆனால் எல்லா உறவுகளும் ஏதோவொரு கட்டத்தில் முடிவுக்கு வரும். இதுவும் வந்தது. பணிமாற்றல் காரணமாக தில்லியை விட்டு அகன்றார். (போகும்போது அவர் வீட்டில் இருந்த மடக்குக் கட்டில் உள்பட சில பொருட்களை நான்தான் எடுத்துக்கொண்டேன். அவை அவ்வப்போது என்னிடம் அடைக்கலமாகும் புதியவர்களுக்குப் பயன்பட்டன. அவருக்கு யாரோ ஒரு வாடிக்கையாளர் அளித்த இரண்டு புதிய கம்பளிகள் இப்போதும் என் வீட்டில் உண்டு.) 

பெங்களூர், பெல்காம் என்று ஊர் ஊராக அவர் சுற்றினாலும் நாங்கள் இந்த இருபதாண்டுகளாக விடாமல் தொடர்பில் இருந்தே வருகிறோம். அவர் எத்தனை ஊர்களில் வசித்திருந்தாலும் சரி, தில்லி அவருக்கு மற்றொரு சொந்த ஊராகவே இருந்தது. அதனாலும், அவருடைய மகளுக்கு திருமணமாகி தில்லியில் குடியமர்ந்ததாலும், வங்கி வேலைகள் காரணமாகவும் அடிக்கடி தில்லி வருவார், சந்தித்துக்கொள்வோம்.

அப்படித்தான் சுமார் 12 ஆண்டுகள் முன்பு ஒருமுறை வீட்டுக்கு வந்தார். கணக்கிலும் கம்ப்யூட்டரிலும் புலி என்றாலும், இணையத்தில் அவ்வளவு பரிச்சயமில்லை அவருக்கு. அப்போது வலைப்பூக்கள் எல்லாம் கிடையாது. ஃபோரம்ஹப் இருந்தது. யாஹூ மூலமாக வலைதளம் உருவாக்கும் வசதி இருந்த்து. அப்போது நானும் ஒரு பக்கத்தை உருவாக்கி வைத்திருந்தேன். “யோவ்... எனக்கு தமிழ் டைப்பிங் சொல்லிக் கொடுமய்யா... நீர் மட்டும் இவ்வளவு வேகமா அடிக்கிறீர்... வெப் பேஜ் எல்லாம் போட்டு வச்சிருக்கீர்...” என்றார். அவருக்கு டைப்பிங்கும், வெப் பேஜ் ஆரம்பிப்பது குறித்தும் சொல்லிக் கொடுத்தேன். சுமார் 4-5 மணிநேரம் வேலை செய்து கொண்டிருந்தார்.

யோவ் இங்கு வந்து பாருமய்யா என்றார்.

பார்த்தேன். அவருடைய பெயரில் ஒரு வெப் பேஜ் உருவாக்கியிருந்தார். அதில் 3-4 பக்கத்துக்கு ஒரு கட்டுரை முதலாவதாக எழுதியிருந்தார். இப்போது முழுமையாக நினைவில்லை. அந்தக் கட்டுரை என்னைப் பற்றியது. வந்தாரை வாழவைக்கும் புதியவன், இவருடைய வீட்டுக் கதவு அடையா நெடுங்கதவு என்ற அந்தக் கட்டுரையில் இருந்தது. என்மேல் அவர் வைத்திருந்த அன்பின் வெளிப்பாடு அது. அதைவிட முக்கியமாக, அந்த நான்கு மணிநேரத்தில் டைப்பிங் கற்று, நான்கு பக்கங்களை அடிக்கவும் முடிந்தது. அதுதான் அவருடைய சிறப்பு.

சுமார் ஓராண்டுக்கு முன்பு நியூ ஜெர்சி சென்றவர், அங்கிருந்து என் வலைப்பூவைப் படித்துக்கொண்டிருந்தார். ஒருநாள், “யோவ்... யுனிகோட், பிளாக் பத்தி சொல்லுமய்யா... நானும் பிளாக் ஆரம்பிக்கிறேன்” என்றார். அஞ்சல் மூலமாக விளக்கினேன்.

ஓராண்டுக்குள் அவர் எங்கோ உயரத்துக்குப் போய்விட்டார். மாதம் ஒரு பதிவு என்று இருந்தது, இப்போது வாரம் 3-4 பதிவுகள். அதுவும் அத்தனையும் அருமையான பதிவுகள். அவருடைய சிறுகதைத் தொகுப்பை 'தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்' என்ற பெயரில் அகநாழிகை வெளியிட்டுள்ளது. நேற்றுதான் நூல் கூரியரில் வந்தது. இன்னும் வாசிக்கவில்லை. முன்னுரையைப் படித்ததும் இதை எழுதவேண்டும் என்று தோன்றியது. பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் என்னைப்பற்றி வலையில் அறிமுகம் செய்தவருக்கு நன்றிக்கடன் !

யார் அவர் என்று கேட்கிறீர்களா... இப்போதுதான் அவரை பேஸ்புக்கில் பார்த்தேன். இன்னும் அழைப்புக்கூட விடுக்கவில்லை. கோபம். பேஸ்புக்கில் அகவுன்ட் ஓப்பன் செய்தவர் ஏன் எனக்குத் தெரிவிக்கவில்லை என்று கோபமோ கோபம்.

நீங்களும் இவரை நட்பாக்கிக்கொள்ளலாம். அவருடைய வலைப்பூவில் எழுதும் படைப்புகளையும் படிக்கலாம். 

https://www.facebook.com/chellappa.yagyaswamy?ref=ts&fref=ts

****
நண்பர் ஷாஜகான் அவர்களே, தங்கள் நினைவுக் குறிப்புகளுக்கு நன்றி!

முகநூலில் வருவதற்கு நேரம் இல்லாததால் அதுபற்றி யாருக்கும் தெரிவிக்கவில்லை. இப்போது நீங்கள் அறிவித்துவிட்டீர்கள். இனி வேறு வழியில்லை. அதற்கும் நேரம் செலவழிக்க முடிவு செய்துவிட்டேன். ('அதானே பார்த்தேன், கம்ப்யூட்டரை விட்டு வராமல் இருப்பதற்கு வழி சொல்லும் நண்பர்கள் தானே உங்களுக்கு இருக்கிறார்கள்!' என்று ஒரு குரல் சமையலறையிலிருந்து கேட்கிறது.)

நண்பர் ஷாஜகான், புதுதில்லியின் பதிப்புத்துறையில் நன்கு அறியப்பட்டவர். பல்வேறு உலகமொழிகளில் வெளியாகும் நூல்களிலும் இவரது பங்களிப்பு இருக்கிறது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். அந்த நாள் பொதுவுடைமையாளர். சிறந்த எழுத்தாளர், கவிஞர். பேச்சாளர். கருத்தரங்கக் கட்டுரையாளர். (நாற்பதாண்டுகளாக உடல் பெருக்காமல் இருக்கும் வித்தை தெரிந்தவர் என்பது உபரித்தகவல்.)

இப்படியும் சில நண்பர்கள் இருப்பது பெருமை தானே!
****
 இந்த இனிய நன்னாளில் எங்கள நட்பைப் புலப்படுத்தும் அந்த நாள் படங்கள் சிலவற்றை இங்கு பதிவேற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தில் ஒரு கவியரங்கில் நான்

அமர்ந்திருக்கும் கவிஞர்கள் : 1.பாரதி-200 பாலசுப்ரமணியன், 2. நான், 5. சேது ராமலிங்கம், 6. நாகவேனுகோபாலன். (மற்ற பெயர்கள் ஷாஜகானுக்குத் தெரிந்திருக்கும்)

எனது வழியனுப்பு விழாவில்( 1992)  நாவலாசிரியர் வாஸந்தி 
மேற்படி நிகழ்ச்சியில் (என்னைப் புகழ்ந்து ?) பேசும் ஷாஜகான்
நினைவுப்பரிசு வழங்கும் பேராசிரியர் திருமதி இந்திராணி மணியன்
 (சென்ற ஆண்டு அமரரானவர்) 
அதே நிகழ்ச்சியில் தில்லியின் இன்னொரு பெரிய எழுத்தாளரான
ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி
பாரதியின் புகழ்பரப்புதலையே நோக்கமாகக் கொண்டு 'பாரதி-200' அமைப்பை
நிறுவிய  திரு பாலசுப்ரமணியன் 
எனது ஏற்புரை

(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com

34 கருத்துகள்:

  1. மிக்க மகிழ்ச்சி ஐயா... மிகவும் பெருமை பட வேண்டிய இனிய நட்பு... தொடரட்டும்... வாழ்த்துக்கள் பல...

    பதிலளிநீக்கு
  2. ! அருமையான நட்பு வளர்க உங்கள் நட்பு!

    பதிலளிநீக்கு
  3. நட்பின் ஆழத்தை
    தமிழ் மீது கொண்டிருக்கும் தொடர் ஆர்வத்தை
    இந்தப் பதிவின் மூலமும் அறிந்து மகிழ்ந்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. மறக்காத நாட்கள் மனதுக்கு மகிழ்சியே

    பதிலளிநீக்கு
  5. மாறாத நட்பும் மலரும் நினைவுகளும் படிக்க
    சுவாரசியமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அருணா அவர்களே! நட்பு என்பது என்றைக்குமே இனியதன்றோ?

      நீக்கு
  6. தமிழ் உங்கள் நட்பை உண்டாக்கியது. அதே தமிழ் விட்டுப்போன நட்பை உங்களுக்கு அடையாளம் காட்டியுள்ளது.தொடரட்டும் உங்களின் நட்பு.

    பதிலளிநீக்கு
  7. மிகவும் பெருமை பட வேண்டிய இனிய நட்பு... தொடரட்டும்...
    த.ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நட்பு தானே நம் வாழ்வின் இருத்தலை மேம்படுத்துகின்றது! தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

      நீக்கு
  8. நட்பில் இணைந்த உரு உள்ளங்கள்.
    வாழிய, வாழியவே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே! நல்ல நட்பு அமைவது இறைவனின் கருணையால் என்றே நம்புகிறேன்.

      நீக்கு
  9. இணைந்த கைகள் போல இனிய நட்பு உங்களின் நண்பர்.

    பதிலளிநீக்கு
  10. இனிமையான காலங்களை அசைப்போடுவதில் உள்ள சுகமே தனி தான்.
    "//பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் என்னைப்பற்றி வலையில் அறிமுகம் செய்தவருக்கு நன்றிக்கடன் !//" - தொடரட்டும் தங்களின் நட்பு. வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  11. இனிய நட்பைக் கொண்டாடும் இதயம் கண்டு மகிழ்ந்தேன்
    வறுமை (ஒருவரை ஒருவர் சந்திக்கும் )நிலையைப் போக்கி
    வளர்க நட்பே எந்நாளும் !

    பதிலளிநீக்கு
  12. நல்ல நண்பர்களை வாய்க்கப் பெற்றவர்கள்தான் உலகின் பெரும் பணக்காரர்கள் என்று நான் மேடைக்காக அல்ல, உண்மையாகவே நம்புகிறவன். நீங்கள் பாக்கியசாலிதான். மகிழ்ச்சியூட்டிய படங்கள் சில நெகிழ்ச்சியூட்டவும் செய்தன. தங்கள் நண்பருக்கும் என் வணக்கத்தைத் தெரிவியுங்கள். தங்களுக்கும் தங்களின் அன்பான குடும்பத்தினர், நண்பர்களுக்கும் என் இனிய உழவர் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் வணக்கம் - நா.முத்துநிலவன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் சென்னை வந்திருந்தும் என்னால் நேரில் சந்திக்க முடியாமல் போனது வருத்தமே. அடுத்தமுறை நிச்சயம் சிந்திப்போம். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தங்கள் மாணவர்களுக்கும் தங்களால் வலையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பல்வகை நண்பர்களுக்கும் தங்களின் தொலைக்காட்சி பட்டிமன்ற ரசிகர்களுக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  13. வணக்கம் ஐயா
    தங்கள் நண்பர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்திய விதம் மிக அழகு. தாங்கள் தேர்ந்தெடுத்த நண்பர்கள் அனைவருக்கும் தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்வு கரும்பைப் போல் இனிக்கட்டும். நன்றி..

    பதிலளிநீக்கு
  14. இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ஐயா!

    மனம் நிறைக்கும் பதிவு. அருமை!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
    இனித்திடும் தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. தித்திக்கும் தமிழர் புத்தாண்டு மற்றும் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள் ஐயா .
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி
    பொங்கும் ஆண்டாக மலரட்டும் .

    பதிலளிநீக்கு