வியாழன், பிப்ரவரி 20, 2014

அன்னையின் தரிசனம் ( பாடல்)


அன்னையின் தரிசனம்

குழந்தையாக ஸ்ரீ அன்னை
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்
பிப்ரவரி 21 – அன்று ஸ்ரீ அரவிந்த அன்னை அவர்களின் பிறந்தநாள். அன்று பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் சிறப்பான தியானம் நடைபெறும். அன்பர்கள் அன்று இரண்டாம் மாடியிலுள்ள அன்னையின் அறையைத் தரிசனம் செய்யமுடியும். 

அன்று அன்னை-அரவிந்தர் சமாதியைத் தரிசனம் செய்பவர்களுக்கு ஆன்ம விழிப்புணர்ச்சி மிக இயல்பாக வரும் என்றும், அன்றைய தினம் அறிவு-செல்வம்-பதவி இந்த மூன்றிலும் எந்த நிலையில் உள்ளார்களோ அதைவிடப் பல படிகள் முன்னேறுவதற்கான உழைப்பையும், ஊக்கத்தையும், உரிய சூழ்நிலைகளையும் அன்னையின் அருள் அடுத்துவரும் நாட்களில் வாரிவாரி வழங்கி வாழ்க்கையை வெற்றிகரமாக்கும்  என்றும் குருநாதர் சொன்னதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

(அன்னை தியான மையங்களில் பாடுவதற்காக 1994  இல் நான் எழுதிக்கொடுத்த பாடல் இது. படங்கள் அனைத்தும் ஆசிரமத்தின் விறபனையில் பெறப்பட்டவை. இவற்றின் பதிப்புரிமை ஆசிரமத்தைச் சேர்ந்ததாகும்.)

சிறுமியாக ஸ்ரீ அன்னை
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்
தூபம் கமழும்
துளசி மணம்
கொலு விருக்கும்.

தூய மலர்க் கூட்டம்
தொழுது பணிந்து
சுகந்த மணம் பரப்பும்.

வார்த்தை ஒடுங்கும்
மௌனம் லயிக்கும்.

எண்ணம் அடங்கும்
இதயம் லேசாகும்.

அன்னையுடன் அரவிந்தர்
ஆழ்ந்த சமாதியிலே

அருகில் வந்தவர்க்கும்
ஆன்மா விழிப்படையும்.

காலத்தால் கட்டுண்ட
கர்மவினை அழியும்.

இளம்பெண்ணாக ஸ்ரீ அன்னை
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்
கலக்கம் மறையும்
கண்கள் ஒளியேறும்.

வாழ்க்கைச் சிக்கல்கள்
வாசலிலே நின்றுவிடும்.

நெஞ்சம் இனிக்கும்
தியானம் நிலைத்துவிடும்.
**** 


அடிக்கடி உனைக்காணும் வரம் வேண்டும் – அம்மா

அழியாமல் நெஞ்சில் உன் அருள் வேண்டும்!

படிக்கொரு துணையாய் நின் பதம் வேண்டும் – உன்னைப்

பாடும் பணியே நிதம் வேண்டும்! – அம்மா! (அடிக்கடி)

மலர்போல மலர்கின்ற மனம்  வேண்டும் தாயே! -கங்கை அமரன் பாடல்
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்

திசைஎல் லாம் உன் துணை வேண்டும்- நல்ல
சேதியே என்னைச் சேர வேண்டும்-அம்மா

கைகுவித்து உனை வேண்டும் மனம் வேண்டும்- திருக்
கதவம் திறந்து தரி சனம் வேண்டும்! –அம்மா!

-    இராய செல்லப்பா (இமயத்தலைவன்)
 2004  ஏப்ரல் 24 அன்று ஆசிரமத்தில் பெற்ற வாழ்த்து அட்டை இது.
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்
 1999  ஏப்ரல் 24 அன்று ஆசிரமத்தில் பெற்ற வாழ்த்து அட்டை இது
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்
2000  ஏப்ரல் 24 அன்று ஆசிரமத்தில் பெற்ற வாழ்த்து அட்டை இது
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்
 2007  ஏப்ரல் 24 அன்று ஆசிரமத்தில் பெற்ற வாழ்த்து அட்டை இது
படம்-நன்றி: ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்

பாடல்: © Y Chellappa

தகவல்: சென்னை - நந்தனத்திலுள்ள -   அமரர் ஆனந்தபாலா என்ற ஆர். பாலசுப்பிரமணியம் அவர்களால் துவங்கப்பட்டு -1986  முதல் தொடர்ந்து பக்தியோடு இயங்கிவரும் - ஸ்ரீ அன்னை தியான மையம் - நாளை - பிப்ரவரி 21 - அன்னை பிறந்தநாளை முன்னிட்டு காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். கட்டணம் ஏதுமில்லை. அனைவரும் வரலாம் - சிறு குழந்தைகள் உள்பட. )

23 கருத்துகள்:

  1. நீங்கள் எழுதியுள்ள பாடல் ஓசை நயத்துடன் நன்றாக இருக்கிறது.

    சுமார் 15 வருடங்களுக்கு முன்னால் நான் எந்தப் புத்தகத்தித் திறந்தாலும் அன்னை பற்றிய ஏதாவது ஒரு செய்தி அங்கு இருக்கும். நான் சந்திக்கும் நபர்களில் தினம் ஒருவராவது என்னிடம் அன்னையைப் பற்றி ப்ரஸ்தாபிப்பார்கள். என்னுடைய அதிகாரி ஒருவர் உங்களுக்கு அன்னையின் கருணை இருக்கிறது இந்தப் படத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு படத்தைத் தந்தார். 'தினம் ஒரு மலரை நினைத்து - நினைத்தால் கூடப் போதும் - அதை அன்னையின் காலடியில் சமர்ப்பிப்பதாய் நினைத்துக் கொள்ளுங்கள்' என்றார்.

    நான் இதுவரை பாண்டிச்சேரி ஆஸ்ரமம் பார்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையே நண்பரே! அரவிந்த ஆசிரமம் 1985க்கு முன்னால் தமிழர்களுக்கு வரவேற்பில்லாத ஒரு நிறுவனமாகவே இருந்தது. காரணம், அரவிந்தர-அன்னையைப் பற்றி அறிந்தவர்கள் அந்நாளில் பெரும்பாலும் மேலை நாட்டினராகவோ, அல்லது வங்காளி, குஜராத்தி மொழியினராகவோ மட்டுமே இருந்தார்கள். வேறு மொழிகளைச் சேர்ந்தவராக இருந்தால் பெரும் பணக்காரராகவோ, அல்லது மெத்தப் படித்தவராகவோ இருந்தால் மட்டுமே ஆசிரமத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தமிழர்கள் வெறும் கடைநிலை ஊழியங்களுக்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டனர். இந்த நிலையை மாற்றியவர், கர்மயோகி என்ற பெயரில் அந்நாளில் அமுதசுரபியில் பல ஆண்டுகள் தொடர் கட்டுரை எழுதி, தமிழுலகில் அன்னை-அரவிந்தரின் கருத்துக்களைப் பரப்பக் காரணமாக இருந்த பேரறிஞர். அவரது வழிகாட்டுதலில் துவங்கப்பட்டது தான் சென்னை நந்தனத்திலுள்ள தியான மையம். அவரது இடையறாத முயற்சிகளால், ஆசிரமம், தமிழ்நாட்டு ஏழை எளியவ்ரகளுக்கும் இன்று வாசலைத் திறந்து விட்டுள்ளது. எந்த விதமான மதச் சடங்குகளும் இல்லாமல், எந்த வகையான பணவசூலிப்பும் இல்லாமல், எந்தவகையான மூட நம்பிக்கைகளுக்கும் இடம் தராமல், ஆன்மிக விழிப்புணர்வு வழங்கும் ஆலயமாக இன்று அரவிந்த ஆசிரமம் விளங்குகிறது என்றால் இந்த மாற்றத்தைக் கொண்டுவந்த கர்மயோகி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 28 வருடங்களாகத் தொடர்ந்து சென்னையில் தங்கள் இல்லத்தின் ஒரு பகுதியாக அன்னை தியான மையத்தை நடத்திவரும் அமரர் பாலசுப்பிரமணியம் அவர்களின் குடும்பத்தாரையும் போற்றியேயாக வேண்டும்.

      நீக்கு
  2. வணக்கம்
    ஐயா.

    அன்னை பற்றிய சிறப்பு பதிவு மிக அருமையாக உள்ளது அறிய முடியாத விடங்களை அறிந்தேன் தங்களின் பதிவு வழி.பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. அன்னையைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவைத்தமைக்கு நன்றிகள் பல.எல்லோருக்கும் அன்னையின் ஆசி கிடைத்து நல்லோராக விளங்கிட அன்னையிடமே வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "எல்லாப் பிரார்த்தனைகளுமே பதிலளிக்கப்படும். ஆனால் அதை நீங்கள் உணர்வதற்குச் சிறிது காலம் பிடிக்கும்" - என்பது அன்னையின் பிரபலமான பொன்மொழி.

      நீக்கு
  5. அன்னையின் சிறப்பான பல தகவல்களுக்கு நன்றி ஐயா... உங்களுடன் ஒரு முறை சென்று வர வேண்டும்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. அன்னை பற்றிய தகவல்கள் ஏற்கனவே அறிந்திருந்தாலும் தங்களிந்தப் பகிர்வுக்கு மிக்க நன்றி அதுவும் தங்களின் அருமியயான, அழகான பாடலுடன்!

    //எந்த விதமான மதச் சடங்குகளும் இல்லாமல், எந்த வகையான பணவசூலிப்பும் இல்லாமல், எந்தவகையான மூட நம்பிக்கைகளுக்கும் இடம் தராமல், ஆன்மிக விழிப்புணர்வு வழங்கும் ஆலயமாக இன்று அரவிந்த ஆசிரமம் விளங்குகிறது என்றால் இந்த மாற்றத்தைக் கொண்டுவந்த கர்மயோகி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். // சத்தியமே!

    பதிலளிநீக்கு
  7. அன்னையைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவைத்தமைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  8. உங்கள் கவிதை மிக மிக நன்றாயிருந்தது!
    kbjana.blogspot.com

    பதிலளிநீக்கு
  9. கவிதையும் அன்னை பற்றிய பதிவும் அருமை....!
    நன்றி ! வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
  10. உங்கள் கவிதை மிகவும் துல்லியமாக இதய விளக்கினை ஏற்றுவதாய் அமைந்துள்ளது.
    எனது வாழ்த்துக்கள்.
    ஏதாவது ஒரு நாள் இங்கே இந்த நந்தனம் பிரார்த்தனை நிலையத்திற்கு அவசியம் வரவேண்டும்.
    பிரார்த்தனையில் கலந்து கொள்ளவேண்டும்.
    புதுவை அன்னை ஆசிரமத்திற்கு 1987ம் வருஷம் சென்று இருக்கிறேன்.

    இந்த பிரார்த்தனை மையத்தின் விலாசம், தினசரி நேரங்கள் பற்றிய தகவல்கள் இருப்பின் அருள் கூர்ந்து தரவும்.

    சுப்பு தாத்தா.
    www.wallposterwallposter.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புகிறேன். வருகைக்கு நன்றி!

      நீக்கு
  11. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : தைரியசாலிகள் மட்டும் வந்து இந்தப் பதிவைப் படிங்க!

    பதிலளிநீக்கு
  12. இன்றைய பகிர்வு தங்களின் கருத்துரைக்காக : http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Prayer-Time.html

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் நண்பர்களே

    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    பதிலளிநீக்கு