சனி, அக்டோபர் 26, 2013

அலையே வா! (சிறிய கவிதை)

 
பஹ்ரைனில் நான் -வருடம் 2006
வானத்து மேனியைத் தொட்டு-எழில்
வையத்தின் எல்லையாய்க் கால்பரப்பிட்டு
நீலத்தி ரைக்கடல் இங்கே – நல்
நித்திரை கொண்டு களித்திடல் காணீர்!

பொன்னென மேவிடும் நிலவு – அதன்
புத்தொளி கண்டு புறப்படும் அலைகள்
மின்னெனத் தாவிடும் மேலே – கரை
மீதினில் ஊர்ந்திடும் வேகத்தினாலே!

ஆயிரம் ஆயிரம் யுகங்கள் – கடல்
அன்னையின் மார்பினில் ஆடியதாலே
போயினதோ நீர் வேட்கை – மணல்
பூத்திடும் கரையினில் காணுது ஆசை?

வெள்ளியை உருக்கிய மேனி – அது
விண்ணினைத் தழுவிட விரைந்தது போலே
துள்ளி எழுந்திடும் சாயும் – உடன்
துணைவரத் துணைவரத் தொடர்ந்துமுன் னேறும்!

ஏழையின் கனவுகள் போலே – எழும்
இளமையின் ஆசைகள் தொடர்வது போலே
கோழையின் அச்சங்கள் போலே – அலை
கூட்டங்களாகவே வாழ்ந்திடல் கண்டேன்!

தனிமையில் இன்பங்கள் இல்லை – எனும்
தத்துவம் தன்னை ஞாலத்தில் வாழும்
மனிதருக் காகவே சொல்ல – அலை
வந்திங்கே பேசி மறைந்திடல் கண்டேன்!

எல்லையிட்டே நிற்கும் கரைகள் – அதை
எத்திவிட்டே அலை ஏகிடப் பார்க்கும்
வெல்வதுண்டோ ஒருநாள்? – எனில்
விடுவதுண்டோ அலை, வேகத்தைத் தானும்?

மாந்தருக்கே இது பாடம் – வெற்றி
மாலையைச் சூடிட யார் முனைந்தாலும்
சோர்ந்திட லின்றி மென் மேலும் –செயல்
துணிந்திடல் வேண்டும் என்பது காணீர்!

   - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்)
             (1988 இல் எழுதி இதுவரை வெளிவராத கவிதை).

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com. Ph. 044-67453273

24 கருத்துகள்:

  1. அருமை...

    ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. ஏழையின் கனவுகள் போலே – எழும்
    இளமையின் ஆசைகள் தொடர்வது போலே//உண்மையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அப்படியா? 'இளமையின் ஆசைகள்' இன்னும் தொடர்கிறதா? வீட்டில் சொல்லிவைக்கட்டுமா? வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. அழகான கவிதை வரிகள் ஐயா... அருமை....அருமை

    பதிலளிநீக்கு
  4. மாந்தருக்கே இது பாடம் – வெற்றி
    மாலையைச் சூடிட யார் முனைந்தாலும்
    சோர்ந்திட லின்றி மென் மேலும் –செயல்
    துணிந்திடல் வேண்டும் என்பது காணீர்!

    -- முத்தாய்ப்பான வரிகள்! மிகவும் அருமை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது, அந்நாளில் எனக்கு நானே சொல்லிக்கொண்ட வரிகள். தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  5. அலையிலும் பாடம் படிக்கலாம்.இயற்கை எழில் அனைத்திலும் இன்பம் காண்லாம். ரசித்து வாசித்தேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. //துள்ளி எழுந்திடும் சாயும் – உடன்
    துணைவரத் துணைவரத் தொடர்ந்துமுன் னேறும்!// அழகு!
    //சோர்ந்திட லின்றி மென் மேலும் –செயல்
    துணிந்திடல் வேண்டும் என்பது காணீர்!// அருமை ஐயா!
    அழகு கவிதையை ரசித்து மகிழ்ந்தேன்..நன்றி!

    பதிலளிநீக்கு
  7. //தனிமையில் இன்பங்கள் இல்லை – எனும்தத்துவம் தன்னை ஞாலத்தில் வாழும்
    மனிதருக் காகவே சொல்ல – அலை
    வந்திங்கே பேசி மறைந்திடல் கண்டேன்//

    "தனிமையிலே இனிமை காண முடியுமா?" - என்கிற பாடல் வரிகளை நினைவூட்டியது இந்த வரிகள். நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  8. கவிதை அருமை ஐயா.
    ரசித்தேன்
    சுவைத்தேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர்ந்த வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  9. துணிவோடு தொடரத் துன்பம் தொலைந்திடும்
    இனியேது துயரம் எழுந்திடு இன்றேயென
    அழகான கவிவரிகள் ஆழமாய் மனதில்
    உழ ஓடிவந்தேன் உவகையொடு வாழ்த்திடவே!..

    மிக மிக அருமையான கவிதை ஐயா!
    ஒவ்வொரு வரிகளும் உறுதியை உணர்வை ஊன்றிச் சொல்லியது!
    வாழ்த்துக்கள் ஐயா!

    ஐயா.. ஒரு விண்ணப்பம்.. இங்கு உங்களைத்தொடர கூகிள் + ல் நான் கணக்கு வைக்கவில்லை.

    மெயிலில் புதிய பதிவுகளைப் பெற்றுக்கொள்ளவும் வசதியைக் காணவில்லையே ஐயா!

    எப்படி உடனுக்குடன் உங்கள் பதிவுகளை நான் பெற்றுக்கொள்வது..

    ஆவன செய்யுங்கள். மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தங்கள் வருகைக்கு. நீங்கள் கேட்டது இப்போது செய்யப்பட்டுவிட்டது. பார்த்துச் சொல்லுங்கள் சரிதானா என்று!

      நீக்கு
  10. மிக்க நன்றி ஐயா!
    இப்போதுதான் வந்து பார்த்தேன்... உடனேயே அப்படியே இணைந்துவிட்டேன்.

    மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உங்களுக்கு ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இளமதி அவர்களே! தொடர்ந்து வருகை தந்தால் உற்சாகமாக இருக்கும்.

      நீக்கு