புதன், அக்டோபர் 16, 2013

தீபாவளிக் கவிதை – சற்று முன்னதாகவே!


நரகாசுரன் வாழ்க

அரக்கனவன் நர காசுரன் – முன்பு
ஆண்டிருந் தானாம் நாட்டிலே
அறம்புரி வோரை வெருட்டியே – தன்னை
அண்டினபேரைத் துன் புறுத்தியே

இருந்திடும் வேளையில் தேவனாம்- கண்ணன்
எழுந்தரு ளிப் போர்க் களத்திலே
அரக்கனை வென்றுடல் வீழ்த்தினான்- அந்த
அரக்கனும் சாகையில் கூறினான்:

“கண்ணனே என் பிழை எண்ணினேன் – உன்
கைகளி னால் விழிப் பெய்தினேன் – இந்தச்
சின்னவன் சாவதும் இன்பமே! – உன்றன்
செந்தழல் பாதத்தில் நின்றுமே! – இனி

மண்ணினில் யாவரும் இந்தநாள் – தன்னை
மகிழ்ந்து கொண்டாடியே போற்றுக! – என்றும்
புண்ணிய ‘தீபா வளி’யெனப் – பெயர்
புனைந்துமே இந்தநாள் வாழிய!”
**

உண்மைக் கதையிது ஆகுமோ? – இல்லை
   ஒப்பனை ஏற்றிய சாயமோ? – இதைச்
சொல்ல வல் லோர்கள் யாவரோ? – எவர்
   சொன்னாலும் உண்மை மறையுமோ?

‘தீபாவளி’ என்ற சொல்லிலே – மனம்
   தீபச் சுடராக மின்னுமே! – தினம்
தீபாவளியென வந்திடின் – நம்
  சின்னக்குழந்தைகள் துள்ளுமே! – இந்தத்

  தீபத்திருநாள் தோன்றிடச் செய்தவன்
  தீயவனாயினும் கும்மியடி- நர
  காசுரன் வாழ்கெனக் கும்மியடி!
***

மெல்ல மெல்ல இருள் போகவும் – ஒளி
    மெல்லக் கிழக்கினில் காணவும்
முந்தை இரவினில் கண்விழித்தே – பணி
   முற்றும் புரிந்திட்ட அன்னையும்

 செல்லக் குரலிட் டெழுப்புவாள் – பிள்ளை
     சின்ன இளமுகம் வருடுவாள்
துள்ளி எழுந்தவன் பாதி உறக்கத்தில்
     தூங்கிட மீண்டும் முயலுவான் – இவள்

செல்ல மொழியினில் ஏசுவாள் – வெடிச்
     சத்தங்களைத் துணை கோருவாள்  - புதுச்
சட்டையும் உண்டென்று கூறுவாள் – இவன்
    சட்டென்று துள்ளி எழுகுவான் – கண்ணில்

பாதிக் கனவுகள் பாதி விழிப்புகள்
பார்ப்பது தான் என்ன இன்பமே! – இந்தத்

   தீபத்திருநாள் தோன்றிடச் செய்தவன்
   தீயவனாயினும் கும்மியடி- நர
   காசுரன் வாழ்கெனக் கும்மியடி!
***

எள்ளில்வரும் ஒரு எண்ணெய் வரும் – இவன்
   சின்ன உடலினில் மெல்ல விழும்
அன்னைவிரல் வரும் மெல்லத்தொடும் – பின்
   அழுத்திவிடும், கை வழுக்கி விழும்!

சொட்டும்துளி ஒரு கண்ணில் விழும் – அதைத்
   தொட்டவிரல் இன்னும் எண்ணெய் தரும்!
கொட்டும் கண்ணீருடன் குளிக்க வரும் – சிகைக்
   காயின் நெடியது தானும் வரும்!

எண்ணெய்க் குளியலை விட்டெழுந்தால் – இவன்
எய்துவதே பே ரின்பமடா! – இந்தத்

   தீபத்திருநாள் தோன்றிடச் செய்தவன்
   தீயவனாயினும் கும்மியடி- நர
   காசுரன் வாழ்கெனக் கும்மியடி!
***

கன்னங்கருத்ததோர் மண்ணிருந்தே –வரும்
  வெள்ளைப் பருத்தியும் ஆலையிலே
கன்னம் கறுத்தவர் தொட்ட உழைப்பினில்
  வண்ணப் புத் தாடையாய்ப் பூத்து வரும்!

பச்சை இலைகளைத் தின்றுமிழும் – புழு
  பாருக்கெல்லாமே பட்டு தரும்!
வெள்ளி இழைகளைக் கத்தரித்தே – உடன்
  நெய்திடச் சேலையும் தான் பிறக்கும்!
 
காவிரி பாய்கிற ஊர்களிலும் – எங்கள்
  காஞ்சியிலும் சேலம் கூடலிலும்
பூவிரிக்கும் பட்டுச் சேலையின்றேல் – ஒளி
  பூத்திடுமோ,தீ பாவளியில்? – அந்தப்

பட்டுதரும் தொழி லாளர்கள் வாழ்வினில்
பரவட்டும் ஒளியென்று கும்மியடி- இந்தத்

  தீபத்திருநாள் தோன்றிடச் செய்தவன்
  தீயவனாயினும் கும்மியடி- நர
  காசுரன் வாழ்கெனக் கும்மியடி!
***

மெல்லத் தெறிக்கின்ற ‘கேப்’ வெடியும் – விண்ணில்
  மேல்வெடிக்கின்றதோர் ‘ராக்கெட்’டும்
கண்ணைத்திருடும் வண்ண மத்தாப்பும் – நம்
  கால்தொட்டுச் சிரிக்கின்ற ‘சக்கர’மும்

யானைவெடிகளும் ‘பாம்பு’ம் ‘அணுகுண்டு’ம்
  யாரும் பிடிக்கின்ற ‘சாட்டை’யதும்
தானும் வெடிக்கவே தாவியழும், அன்னை
  தோளினில் சாய்ந்த இளங்குழந்தை!
 
பட்டுக்கரங்களில் பட்டாசை – சின்னப்
  பையன் எடுத்ததைத் தீக்கொளுத்திப்
‘பட்’டென ஓசையில் காதுகள் பொத்தியே
  பார்க்கின்ற இன்பமே இன்பமடா! –இந்தச்
 
சின்ன வெடிகளை மத்தாப்பு வாணங்கள்
செய்தவர் வாழ்கென்று கும்மியடி – எங்கள்
சிவகாசி வாழ்கென்று கும்மியடி – இந்தத்

  தீபத்திருநாள் தோன்றிடச் செய்தவன்
  தீயவனாயினும் கும்மியடி- நர
  காசுரன் வாழ்கெனக் கும்மியடி!

(குறிப்பு: 1991- இல் தீபாவளியன்று தில்லி வானொலியில் வெளியானது. என் மகனுக்கு ஐந்து வயதாக இருந்தபோது தீபாவளியன்று அவனுடைய நடவடிக்கைகளை அனுபவித்து எழுதிய கவிதை. மினியாபோலிஸில் இருந்து இன்றும் அவன் ரசிக்கக்கூடும்.).

 © Y. Chellappa
Email: chellappay@yahoo.com 

 

 

24 கருத்துகள்:

  1. அருமையாக எழுதி உள்ளீர்கள் ஐயா... நீங்கள் ஏன் ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது... கலந்து கொள்ளுங்கள்... நன்றி...

    இதோ லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html

    பதிலளிநீக்கு
  2. நன்றி தனபாலன் அவர்களே! ஏராளமான இளைஞர்கள் எழுதுகிறர்கள். அவர்களுக்கு நாம் ஆதரவு தெரிவிக்கவேண்டுமல்லவா? இருந்தாலும் நீங்கள் சொன்னதால் எழுதுவேன். நாளை?

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா.

    தீபாவளிக் கவிதையின் ஒவ்வொரு வரிகளும் ரசிக்கும் படி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா

    நீங்களும் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளவேண்டும் ஐயா.... பணிவாக
    தனபாலன் அண்ணா லிங்க் போட்டிருக்கார்..... பாருங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. அற்புதமான கவிதை
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. ரூபன் அவர்களே, மிக்க நன்றி. உங்களுக்காக இன்னுமொரு தீபாவளிக்கவிதை எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள ரமணி அவர்களே! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. கவிதை எழுதி தீபாவளியைத் தொடங்கி விட்டாச்சி அருமை

    Typed with Panini Keypad

    பதிலளிநீக்கு
  8. எல்லாம் உங்களால் வந்த வினை தான் அய்யா! உங்களை முந்திக்கொண்டு எழுதலாமே என்றுதான்...! தவறில்லையே?

    பதிலளிநீக்கு
  9. ரசிக்கும்படியான அழகிய கவிதை...

    வாழ்த்துக்கள் தலைவரே...

    பதிலளிநீக்கு
  10. 1991இல் வெளியானதை எங்களோடு தற்போது பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. எக்காலத்திற்கும் பொருந்துமளவு உள்ள அழகான கவிதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. நன்றி கவிதைவீதி சௌந்தர் அவர்களே! 'தலைவா'படப் பிரச்சினைக்குப் பிறகு 'தலைவர்' என்ற வார்த்தையே அச்சமூட்டுகிறது. என்னை ஒரு தொண்டனாகவே இருக்க விடுங்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  12. உங்கள் கருத்துக்கு நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் அவர்களே! தீபாவளி எல்லாக் காலத்துக்கும் பொருத்தமானது அல்லவா?

    பதிலளிநீக்கு
  13. நல்ல கவிதை! வாழ்த்து உரித்தாகுக!

    பதிலளிநீக்கு
  14. உண்மைக் கதையிது ஆகுமோ? – இல்லை
    ஒப்பனை ஏற்றிய சாயமோ? – இதைச்
    சொல்ல வல் லோர்கள் யாவரோ? – எவர்
    சொன்னாலும் உண்மை மறையுமோ

    நான் மிகவும் இரசித்த வரிகள்.

    தீபாவளி கவிதை அருமையாக உள்ளது ஐயா.

    பதிலளிநீக்கு
  15. புலவர் ராமானுஜம் ஐயா அவர்களுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  16. அருணா செல்வம் அவர்களின் வருகை மகிழ்ச்சி யூட்டுகிறது. நன்றி!

    பதிலளிநீக்கு
  17. எனது மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயா. சற்று முன்னதாகவே

    பதிலளிநீக்கு
  18. கவிதை இனிது ஐயா
    இனழய வாழ்த்து.
    ஏனய்யா இவ்வளவு நீட்டக் கவிதை.
    நின்று வாசிக்கவே நேரமின்றியுள்ளதே...
    காலையில் பார்த்திட்டு விட்டிட்டென். இப்போது
    கருத்தெழுத வேண்டுமே என்று வாசித்தேன்.
    மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  19. இது வானொலிக்காக எழுதப்பட்டது. எட்டு நிமிடம் படிக்கும்படியான நீளம் இருக்க வேண்டுமே, வானொலிக்கு! தங்கள் கருத்துரைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. அழகான விரிவான மனம் கவர் கவிதை.
    பகிர்விற்கு நன்றி ஐயா !

    பதிலளிநீக்கு
  21. கருத்துரைக்கு நன்றி, ஸ்ரவாணி அவர்களே!

    பதிலளிநீக்கு
  22. காலம் பல கடந்தாலும் கவிதைக்கும் மூப்பில்லை, அதை எழுதிய கவிஞருக்கும் முப்பில்லை. நிறைவான மரபுக் கவிதை இது!.
    சார், இக் கவிதை ஆசிரியர் விருத்தத்தில்தானே வரும்?.

    பதிலளிநீக்கு
  23. தெரிந்துகொண்டே சோதிக்கலாமா நண்பரே? தங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு