செவ்வாய், ஏப்ரல் 16, 2013

வேர்வை கவிதையடா (4)


அடுத்த பஸ்சில்
அவசரமாய் உட்புகுந்து
சீட்டுக்காய்க் கை நீட்ட
 
இருந்த ஒரு நோட்டு
இருபதுரூபாய் நோட்டு
 
நடத்துனரின் கோபம்
நல்வசவாய் மழைபொழிய
 
ஒரு
குறுந்தாடிப் பயலும்
கூடவே பின்மொழிய
 
பெண்கள்,
வேலைக்குப் போவதே
வேண்டாத வேலையென்று
 
தொண்டுகிழமொன்று
கருத்தரங்கம் துவக்கிவிட,
 
வலப்புறமாய் பஸ்திரும்பி
வளைகையிலே இன்னொருவன்
 
இயல்பாய்த் தன்னுடலை இவள்மேலே சரியவிட,
 
சற்றே விலகிக்
கைப்பையைக் கைமாற்றித்
தலைக்குமேலே
கம்பியைப் பற்றுகையில்
 
கச்சிதமாய் ரவிக்கை
கையிடுக்கில் தையல் விட,
உட்கார்ந்த சில தடியர்
உற்றுற்றுப் பார்க்கிறதாய்
 
நெஞ்சம் குறுகுறுக்கும்
மேனியெல்லாம் கூசும்
 
கண்களிலோ,
 
காலம் கடந்ததென்று
கடியாரம் மொழிபேசும்.
 
சாலையிலே வாகனங்கள்
சரியாய் நகராது!
 
சாதிச் சங்கம்
நடத்துகிற ஊர்வலமாம்
 
பாதியிலே நின்றுவிடும்
பஸ்செல்லாம்! நடப்பதன்றி
 
வேறு வழியில்லை!
விறுவிறுப்பாய் நடைகூட்டி
 
அலுவ லகத்தை
அடைகையிலே அவள்வரவு
 
பத்து நிமிடம்
பாதிக்கப் பட்டிருக்கும்!
***
வழக்கமாய்ப் பிந்திவரும்
வழுக்கைத் தலையன் இன்று
 
முன்னால் வந்திருந்து
முகமெல்லாம் பல்லாவான்!
வருகைப் பதிவேட்டில்,
 
பெயருக்கெதிரே
பென்சிலிலே ஓரெழுத்து
ஆங்கில ‘ஏ’ போட்டிருக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக