ஞாயிறு, மார்ச் 24, 2013

விதி யாரை விட்டது? (3) (இறுதி)


இவ்வரிசையில் முந்தைய பதிவினைப் படிக்க:
விதி யாரை விட்டது-1
விதி யாரை விட்டது-2

அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆசிரியர்களுக்கான 'அரியர்ஸ்' போடும் வேலையில் என்னுடைய உதவி தேவைப்படுவதாகவும் சொரகொளத்தூரிலேயே இருக்கும்படியும் வைத்தி சார் கேட்டுகொண்டதால் என் ராணிப்பேட்டை விஜயம் அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.  

எட்டு மணிக்குச்  சரியாக வைத்தி சார் வந்தார்."நம்ம வீட்ல தான் இன்னிக்கி சாப்பாடு. அதனால, அடுப்பு மூட்டாதீங்க" என்றார். கூடவே தன் வீட்டிலிருந்து இட்லி சட்டினி மிளகாய்பொடி செட்டாக வரும் என்றார். வந்தது. என்ன தான் ரவீந்திரன் சார் நன்றாக சமைத்தாலும், இதிலிருந்த சுவை அதில் இல்லை. 


'ஓர் ஆண் சமைக்கும்போது அரிசி,பருப்பு, உப்பு, புளி முதலியவற்றைச் சேர்க்கிறான். ஒரு பெண் சமைக்கும்போதோ
அவற்றோடு அன்பு என்ற அபூர்வமான பொருளையும் சேர்க்கிறாள். அந்த அன்பின் சுவையே அவள்  சமையலின் சுவையாகிறது ' என்று எனது தமிழ்ப் பேராசிரியர் அலிப்பூர் ரஹீம் சொன்னது 
நினைவு வந்தது. (அப்போது காட்பாடியிலிருந்து மேல்விஷாரம்
வருவார். 'ஒன்று பரம்பொருள்' என்ற நூலை எழுபதுகளில் எழுதியவர். அதை ஆசிகூறி வெளியிட்டவர், இரத்தினகிரி
பாலமுருகனடிமை சுவாமிகள் ).  

ஒன்பது மணிக்கு வைத்தி சாரும் நானும் பள்ளிக்கு வந்தோம்.  அரசு ஆணைகளையும், ஆசிரியர்களின் 'சர்வீஸ் 
ரெஜிஸ்டர்'களையும் ஏராளமான வெற்றுத் தாள்களையும் ஒரு பெரிய மேஜையில் பரப்பிவைத்துக்கொண்டு வேலையை ஆரம்பித்தோம். பிற்பகல் ஒரு மணிக்குப் பிறகும் முடிவு தெரிவதாயில்லை.  "சாப்பிட்டுவிட்டு மேற்கொண்டு பார்க்கலாம்" என்றார் வைத்தி சார். அந்த நேரம் பார்த்து சீனியர்-ஆசிரியரும், 
மணியகாரரும் வந்தனர். பின்னால் ஒரு சைக்கிளில் பெரிய 
ஆறடுக்கு டிபன்-கேரியரில் மணியகாரர் வீட்டிலிருந்து 
எல்லாருக்கும் சாப்பாடு வந்தது. 

"ஞாயிற்றுக்கிழமைன்னாலே வாத்தியார்களுக்கு மணியகாரர் வீட்டு சாப்பாடு தான்னு சொரகொளத்தூரில் சின்னக் 
கொழந்தைக்குக் கூடத் தெரியும். நீங்க தான் ஒரு நாள் 
லீவுன்னாலும் ராணிப்பேட்டைக்குக் கிளம்பிடுவீங்களே, அதான் புதுசாப் பாக்கறீங்க" என்று மணியக்காரர் உரிமையோடு 
சொன்னார்.  
 
நான் பேசவில்லை. சாப்பிடும்பொழுது மணியக்காரர் தான் ஆரம்பித்தார்: "சாருக்கு தமயந்தி மேட்டர் தெரியுமில்லையா?" 
 
இல்லைஎன்று தலை யசைத்தேன். "நான் எதற்காகத் தெரிந்து கொள்ளவேண்டும்? ஊரிலுள்ள பெண்மணிகளைப் பற்றியெல்லாம் ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன?"
 
சீனியர் ஆசிரியர்  இது நாள் வரை என்னிடம் பேசியதில்லை. காரணம், அவர் பள்ளிக்கூடத்திற்கு வந்த நாட்களை விட வராத நாட்களே அதிகம். (ஆனால் அடுத்த நாள் வருகை பதிவேட்டில் வந்த மாதிரி கையொப்பம் இடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்). தொழிற்கல்வி ஆசிரியராக நியமிக்கப்பட்டவர். எத்தனையோ வருஷங்களாக இதே பள்ளியில் மாறாமல் இருப்பவர். யாருடனும் பட்டும் படாமலும் தான் பழகுவாராம், ஒரு துறவி மாதிரி. அதனால்  கந்தசாமி என்ற இயற்பெயரைச் சொல்லி எவரும் அழைப்பதில்லை. சீனியர் சார் என்று தான் அழைப்பார்கள். தமயந்தி அவருடைய இரண்டாம் தாரம் என்றல்லவா சொல்வார்கள்? அந்த பெண்மணியைப் பற்றி நான் ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?
 
கந்தசாமி சார்  இப்போது என்னைப் பார்த்து, "தம்பி. இது சின்ன ஊர். ராணிப்பேட்டை மாதிரியோ வேலூர் மாதிரியோ பெரிய நகரம் 
அல்ல. எனவே ஒவ்வொருவரும் மற்ற எல்லாரையும் பற்றி 
தெரிந்து கொண்டே ஆகவேண்டிய அவசியம் வரும். அதற்கு முன்பு
நாமாகவே தெரிந்துகொண்டுவிட்டால் நல்லதல்லவா?" என்றார். 
 
எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. "சார், இந்த ஊரில்  தங்க ஆரம்பித்த நாளிலிருந்தே பெரிய குழப்பமாக இருக்கிறது. ஆளாளுக்கு பொடி வைத்துப் பேசுகிறீர்கள். என்னுடைய நல்லதற்குத் தான் மனோகரன் சாரை என் வீட்டில் சேர்த்து விட்டதாக வேறு தகவல். இப்போது யாரோ ஒரு பெண்மணியைப்  பற்றி என்னவோ சொல்லப் போகிறீர்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை" என்று சற்று அலுப்போடு கூறினேன்.
 
"சொல்வதை முழுவதும் கேட்டுவிட்டீர்களானால் புரிந்து விடும். கொஞ்சம் பொறுமையோடு இருங்கள். அதற்காகத் தான் இன்று வைத்தி சாரிடம் சொல்லி உங்களை ஊரில் இருக்க வைத்தேன்" என்றார் மணியகாரர்.
 
கந்தசாமி சார் சொல்லச் சொல்ல ஒரு திரைப்படத்தின்  கதை மாதிரி இருந்தது. அதன் சுருக்கம் இது தான்:
 
கிருஷ்ணகிரி அருகில் ஒரு கிராமத்தில் ஓர்  இளம்பெண்  காதலனால் கைவிடப்பட்டு கர்ப்பமான நிலையில் தனது 
பாட்டி வீட்டோடு சொரகொளத்தூருக்கு வந்து சேர்ந்தார். துரதிர்ஷ்டமாக, பிரசவத்தின் போது குழந்தை பிழைத்து விட, தாயார் காலமாகிவிட்டார். பாட்டி தான் அக்குழந்தையை வளர்த்து ஆளாக்கினார். ஊரில் அவளுக்குக் கேட்ட பெயர் வந்துவிடக்
கூடாதே என்பதற்காக, அவளுடைய அப்பன் ஒரு குடிகாரன், வீட்டை விட்டு எங்கோ ஓடிப் போய்விட்டான் என்று கூறி
வைத்தாள்.  அவசரம் அவசரமாக அவளுக்குத் திருமணமும்
முடித்து வைத்தார். அதனால் அவளது பள்ளிப் படிப்பு பாதியிலேயே
நின்றது. ஆனால் கணவனுக்கும் அவளுக்கும் ஒத்துப் போக முடியாததால் அவன் வெளி நாட்டுக்குப் போய்விட்டான். பாட்டி, பள்ளி ஆசிரியர்களைக் கெஞ்சிக் கூத்தாடி அவளை மீண்டும் அதே பள்ளியில் சேர்த்து விட்டாள். அந்தப்  பெண் தான் தேவிகா!
 
"தேவிகாவின் தாயார் திருமணம் ஆகாமலே கர்ப்பமாகக் காரணமானவன் யாரோ, அவன் , அவள் இறந்தவுடன் பித்துப் 
பிடித்தவன் போலானான். நல்ல வேளை அவனுக்குத் திருமணம்
ஆகியிருக்கவில்லை. எங்கெல்லாமோ சுற்றி அவனும் இதே 
சொரகொளத்தூருக்கு வந்து சேர்ந்தான். அரசியல் 
செல்வாக்கினால் தொழிற்கல்வி ஆசிரியர் சான்றிதழ் பெற்று 
அரசாங்க உத்தியோகமும் கிடைத்தது. வெகு நாட்கள் கழித்துத்
தான், தனக்குப் பிறந்த பெண்ணும் இதே ஊரில் மணமாகியும் 
கணவனோடு போகாமல் பள்ளிக்கூட மாணவியாகத் தன் 
கண்ணெதிரிலேயே  இருப்பதைத் தெரிந்து கொண்டான்....." என்றார் கந்தசாமி.
 
எனக்கு ஏதோ புரிகிறமாதிரி பொறி தட்டியது. "அப்படியானால், தேவிகாவின் அப்பா நீங்கள் தானா?" என்றேன் ஆச்சரியத்துடன். "எங்களுக்கும் இந்த விஷயம் தெரிந்தவுடன் ஒரே ஆச்சரியம் தான் போங்கள்" என்றார் மணியகாரர்.
 
அப்படியானால் அன்று என் காதுபடக் கேட்ட அந்த உரையாடல்?

'நீங்க ரொம்ப மோசம் சார்..' என்று ஒரு பெண் குரல்.

'உஷ் ..மெதுவா பேசு' இது ஆண் குரல்.

'பின்ன என்ன சார்? நீங்க தானே நேத்து ராத்திரி வான்னீங்க? ரொம்ப நாளா கேட்டீங்களேன்னு வந்தா.. கட்டில்ல இருந்து பேயப் பாத்த
மாதிரி ஓடிப் போய்ட்டிங்களே!'

'அடிப் பாவி! போயும் போயும் நேத்தா வந்தெ? நேத்து குமரன் சார் வீட்டு கட்டில்ல புது சாரில்ல இருந்திருக்கணும்... அய்யய்யோ, அவர் உன்னப் பாத்துட்டாரா?'

'நல்ல வேளை, நான் பின்னாடி வழியா தப்பிச்சிட்டேன்'.

"எனக்கு உண்மையைச் சொல்லுங்கள். அன்று ஜன்னலருகே பேசிக் கொண்டிருந்தது நீங்களும் தேவிகாவும் தானே?"

"ஆமாங்க".

"அதைக் கேட்டதிலிருந்து எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? உங்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் எதோ தொடுப்பு இருப்பது போல் அர்த்தம் பண்ணிக்கொண்டேன். சரியான பாவி நான்".

"யார் கேட்டாலும் அப்படித்தான் நினைத்திருப்பார்கள். அதற்குக் காரணம் சொல்கிறேன். எனக்கு இளம் வயதில் மீன்குழம்பு என்றால் உயிர். தேவிகாவின் அம்மா இறந்த பிறகு அவள்
ஞாபகார்த்தமாக மீன்குழம்பை இனி சாப்பிடுவதில்லை என்று
சபதம் வைத்தேன். அதன்படியே இத்தனை வருடங்கள் இருந்தேன். ஆட்டுக்கறியும் மற்றவையும் சாப்பிடும் நான், மீன்குழம்பு மட்டும் ஏன் சாப்பிட மறுக்கிறேன் என்று ஊரில் எல்லாரும் கேட்பார்கள். நான் சிரித்து மழுப்பிவிடுவேன். ஆனால் எப்போது தேவிகா என்மகள் என்று தெரிந்ததோ அன்று முதல் அவளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்க ஆரம்பித்தேன். அவள் மீன்குழம்பு நன்றாக வைப்பாள் என்ற விஷயம் தெரிந்தவுடன்
சபலம். யாருக்கும் தெரியாமல் எனக்கு மீன் குழம்பு கொண்டு
வருகிறாயா  என்று ஒருநாள்  கேட்டேன். சரி என்றாள். பாவம், அவள் வரும் போதெல்லாம் என் வீட்டில் வேறு யாராவது ஆசிரியர்கள் இருந்து விடுவார்கள். அவளும் தூரத்திலிருந்து பார்த்துவிட்டுப் போய்விடுவாள். கடைசியில் ஒரு நாள் ராத்திரியானாலும் பரவாயில்லை என்று குமரன் வீட்டுக்கு வந்திருக்கிறாள். ஏனென்றால் அந்த வாரம் முழுதும் எனக்கு மனம் சரியில்லை. தனியாக இருப்பதை விட இன்னொரு ஆசிரியரோடு பேசிக் கொண்டிருந்தால் ஆறுதலாக இருக்கும் என்று குமரன்
சார் வீட்டில் இருந்தேன். ஆனால் அன்றைக்குப் பார்த்து நீங்களும் அவரும் மருத்துவாம்பாடியிலிருந்து ரொம்ப லேட்டாக வந்தீர்கள். எனவே நான் என் வீட்டிலேயே உறங்கிவிட்டேன். பாவம், அந்தப் பெண் நள்ளிரவில் உங்களை எழுப்பியிருக்கிறாள். அந்த விஷயம் அவள் மறுநாள் சொன்னபோது தான் தெரியும்.அந்த உரையாடலைத் தான் நீங்கள் ஜன்னலருகில் கேட்டிருக்கிறீர்கள்" என்றார் கந்தசாமி.

தலையிலிருந்து ஒரு பாறாங்கல்லை இறக்கி வைத்தது போல் இருந்தது எனக்கு. ஆனாலும், "நீங்கள் சொல்வது நம்புகிறார்
போல இல்லையே! உங்கள் மகள் உங்களை ஏன் யாருக்கும்
தெரியாமல் வந்து  பார்க்கவேண்டும்? அதுவும் நள்ளிரவில்? " என்று
கேட்டேன்.

மணியகாரர் இடையில் புகுந்தார். "அங்க தான் தம்பி சூட்சுமம் இருக்கு. இவருக்குத்  தான் தேவிகா தன் மகள்னு தெரியுமே தவிர, அவளுக்கு இவர் தான் தகப்பன்னு இதுவரை தெரியாது. அவ பாட்டிக்கும் தெரியாது. நாங்களும் சொல்லக்கூடாதுன்னு  
தடுத்துட்டோம். காரணம் என்னன்னா, இவரு கவர்மெண்ட்டு சர்வெண்ட்டு. யாராவது பிரச்சினையைக் கெளப்பி, இவர  வேலையிலிருந்து எடுத்துட்டா என்ன செய்யறது?  அது மட்டுமில்லாமே, அந்த பொண்ணுக்கு எப்படியும் கல்யாணம் ஆயிடிச்சி. நாளைக்கே அவ புருஷன் வந்து துபாய்க்கு வாடின்னு அழைச்சிகிட்டு போய்டுவான். அந்த சமயத்தில இந்த மாதிரி பழைய கதைகள கேட்டா அவன் இந்த பொண்டாட்டியே வாணாம், நடத்த கெட்டவளோட பொண்ணுன்னு சொல்லிட்டான்னா? அதனால, உங்க கிட்டயும் கெஞ்சி கேட்டுக்கிறோம், நீங்களும் தேவிகாகிட்ட அவ அப்பா யாருன்னு
சொல்லிடாதீங்க" என்று கேட்டுக் கொண்டார்.

கேட்கக் கேட்க எனக்குப் புல்லரித்தது.சமுதாய நீதி என்பதை
எவ்வளவு நுண்ணறிவுடன் அமுல்படுத்துகிறார்கள்
பெரியவர்கள்! அனுபவமே வாழ்க்கை என்பது எவ்வளவு
நிதர்சனமான உண்மை!
 
கடைசியாக எனக்கிருந்த ஒரு சந்தேகத்தைக் கேட்டே விட்டேன்: "ஒரு தகப்பனாக இருந்து கொண்டு அன்றைக்கு என்னிடம்
சொன்னீர்களே - பொதுவாக டிராயிங் மாஸ்டர்னாலே பொண்ணுங்களுக்கு ரொம்ப இஷ்டம். குமரன் சார் மேல தேவிகாவுக்கு ஒரு கண்- என்று ? அப்படிச் சொல்லலாமா நீங்கள்?" என்றேன்.

"உண்மை தான் தம்பி. என்னிடம் சொல்லிச் சொல்லி
வருத்தப்பட்டார் கந்தசாமி. தேவிகாவும் இன்னொரு பொண்ணும்
பேசிக்கொண்டிருந்தபோது    அவர் கேட்டாராம். அதனால் உங்களிடம் சொல்லியிருக்கிறார். நீங்கள் எப்படியும் குமரனிடம் சொல்வீர்கள். அதன் பிறகு அவர் ஜாக்கிரதையாக இருப்பார் என்பதனால் தான் அப்படிச் சொன்னார்" என்று மணியகாரர் விளக்கினார். "அதன் பிறகு தானே குமரன் அந்த வீட்டைக் காலி செய்துவிட்டு உங்களோடு தங்கலாமென்று முடிவெடுத்தார்!"

"அதாவது, தேவிகாவை அவள் கணவன் வந்து அழைத்துக்
கொண்டு போகும்வரையில் பத்திரமாகப் பார்த்துக் கொள்வதற்கு
என்னென்ன வழிகள் உண்டோ அவை எல்லாவற்றையும் செயல்படுத்தி விட்டீர்கள்" என்று சிரித்தேன். எனக்கு உண்மையிலேயே நிம்மதி என்றால் அவ்வளவு நிம்மதி.

"தமயந்தியைப் பற்றியும் சொல்லிவிடுங்கள்" என்றார் கந்தசாமி.

"நான் சொல்கிறேன்" என்று உள்ளே வந்தார், வைத்தி சார். மழைத்தூறல் விழுந்து கொண்டிருந்ததால் வீட்டுக்கு ஒருநடை போய் முற்றத்தில் உலர்த்தியிருந்த புழுங்கிய நெல்லை நனையாமல் கூட்டி வைத்துவிட்டு வந்திருக்கிறார்.  "தமயந்தியை கந்தசாமி சாரின் இரண்டாம் தாரம் என்று ஊரில் சிலர் பேசிக்கொள்வார்கள். அதை நம்ப வேண்டாம். அவளுக்கு
மனநிலை சரியில்லை. அநாதை. சிலநாள் தெளிவாக இருப்பாள். சிலநாள் மோசமான வார்த்தைகளைப் பேசுவாள். ஊரில்
அவளுக்கு யாரும் ஆதரவு இல்லை. கந்தசாமி சார் தான் தன்
வீட்டில் அவளுக்குச் சோறு போட்டு அடைக்கலம்
கொடுத்திருக்கிறார். ஆனால் இரவில் அந்த வீட்டில் தங்க மாட்டார். குமரன் சார் இப்போது காலி செய்தாரே, அந்த வீட்டில் தான்
குமரனோடு தங்கிக் கொள்வார். தமயந்தி நல்ல மனநிலையில்
இருக்கும்போது தன் கணவர், தன்னை ஒரு மனைவியாக
இன்னும் ஏற்க மறுக்கிறார், இரவில் வீட்டில் தங்குவதில்லை
என்றெல்லாம் ஒவ்வொரு ஆசிரியரிடமும் தனித்தனியாக வந்து
புகார் செய்வாள். உங்களிடமும் குமரனிடமும் தான் பாக்கி. அதைத்தான் முன்கூட்டியே இப்போது சொல்லி விடுகிறோம்" என்றார் வைத்தி.

"அந்தப் பெண்ணைபற்றி இவ்வளவு தூரம் சொல்கிறீர்களே, உங்கள் அக்கறைக்குக் காரணம் தெரிந்து கொள்ளலாமா?" என்றேன்.

மணியகாரரின் கண்களில் அவ்வளவு சோகத்தை நான் அதுவரை
கண்டதில்லை. " தமயந்தி என் தூரத்து சொந்தம்" என்றார். "இவளுக்கு மனநிலை சரியில்லை என்று தெரிந்தவுடன் அவர்கள் பார்க்காத வைத்தியம் இல்லை. சென்னை மனநல ஆஸ்பத்திரியிலும் மூன்றாண்டுகள் இருந்தாள். இனி மேல் முடியாது என்றதால் என்னிடம் கொண்டு வந்து விட்டார்கள். அடுத்த சில மாதங்களில் ஒரு ரயில் விபத்தில் இருவரும் இறந்து போனார்கள். அது கூட அவளுக்கு இன்றுவரை தெரியாது. கந்தசாமி மாதிரி நல்லவர்கள் இருப்பதால் தான் அவள் இன்னும் உயிரோடு இருக்கிறாள். செலவுக்குண்டான பணத்தை நான் கொடுத்து விடுகிறேன். ஆனால் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு அவளைக் கண்காணிக்க என்னால் முடிவதில்லை. கந்தசாமி
தான் செய்கிறார்.எல்லாரும் அவளை இவருடைய இரண்டாம் தாரம்
என்கிறார்கள். கந்தசாமி எதற்கும் கவலைப்பட மாட்டார். அவர் ஒரு ஞானி" என்றார்.

"ரொம்ப சந்தோசம் சார்! எனக்கு என்னவோ ஏதோ என்று இருந்தது. நல்ல வேளை குமரனும் இனி என்னோடு இருக்கப் போகிறார்
என்பது உள்ளபடியே எனக்கு சக்தி ஊட்டுவதாக இருக்கிறது.
அது சரி, குமரன் எனக்கு முன்னமேயே இங்கு வந்து விட்டவர்
ஆயிற்றே! அவருக்கு இதெல்லாம் தெரியுமா?" என்றேன். "இல்லை. அந்தப் பொறுப்பு இனி உங்களுடையது. எங்களில் ஒருவராகி
விட்டீர்கள் அல்லவா?" என்றார் கந்தசாமி.

"சரி, காபிக்கு நேரமாகி விட்டது. வாங்க, எல்லாரும் போகலாம்" என்று ஜன்னல்களை மூடத்தொடங்கினார், வைத்தி சார்.

அப்போது "நில்லுங்க, நில்லுங்க, போயிடாதீங்க" என்று அலறியபடியே சரியான ஆடைகள் இல்லாமல் ஒரு பெண்மணி எங்களை நோக்கி ஓடிவந்தார். "நீங்களே நியாயம் சொல்லுங்க. எம் புருஷன் ராத்திரியானா வீட்டுக்கு வர்றதே இல்லை.நீங்க தான் ஒரு வழி சொல்லணும்" என்று அழுதாள். மனநிலை சரியில்லாதவள்
என்று பார்த்தவுடனேயே புரிந்தது.

'இவளா?' என்பது போல் நான் வைத்தி சாரைப் பார்த்தேன்.

"தமயந்தி, தயவு செய்து வீட்டுக்குப் போம்மா! இன்னைக்கு ராத்திரி கட்டாயம் வந்திடறேன்" என்றார் கந்தசாமி.
*******
(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com
 


குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


2 கருத்துகள்:

  1. வணக்கம்... வலையுலகம் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா...

    தங்களின் தகவல் அறிந்தேன்... மிக்க நன்றி... தொடர்களை தொடர்கிறேன்...

    மற்றுமொரு தளத்தில் கருத்திட்ட தடை செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்...

    நண்பர்களிடமும் பகிர்வேன்... தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே! 'செல்லப்பா தமிழ் டயரி' யில் கருத்துக்கள் அனுப்பினால் சரியாக வந்து சேருகிறதே!

    அன்பு கூர்ந்து இன்னொருமுறை முயற்சிக்கவும். settings கூட check செய்துவிட்டேன். மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு