ஞாயிறு, மார்ச் 31, 2013

கவிதா இந்தா கணையாழி! (கவிதை)



(சிறுகதையை உரைநடையில் தான் எழுதவேண்டுமா? கவிதையில் எழுதினால் படிக்கமாட்டீர்களா?)
 
ஸ்ரீ ரங்கம் திருக்கோயில் 
ஆடித் திங்கள் ஓர் வெள்ளி
அம்பாள் கோவில் வாசலிலே
அழகுத் தேராய் நீயிருந்தாய்
அடுத்த வரிசையில் நானிருந்தேன்

மாலைத் தென்றல் வரவில்லை
பகலாய் வெப்பம் காற்றினிலே
கூட்டம் வழிந்த கோவிலிலே
குளிராய் வந்தாய் நீ யங்கே!

காஞ்சிப் பட்டும் கண் மையும்
கன்னம் மஞ்சள் மினுமினுப்பும்
காரில் இறங்கி வந்திட்டால்
கடைக்கா ரர்கள் விடுவாரோ?

அம்மா வாங்க என்றார்கள்
அக்கா என்றாள் ஒரு சிறுமி
தேங்காய் பழம் பூ இந்தாங்க,
ரூபாய் இருபது என்றார்கள்

சின்னப் பெண் என அவளிடமே
சில்லறை தந்தாய், பை பெற்றாய்
பின்னா லிருந்த நானும் தான்
பெற்றேன் அதுபோல் எனக்கொன்று!

அர்ச்சனை சீட்டு வரிசையிலும்
அடியேன் முன்னே நீ இருந்தாய்
நுழைவுச் சீட்டு பெறுகையிலும்
பின்னால் இருந்தேன், பார்த்தாயா?

ஒரு கண்ணாலே கோவிலையும்
மறு கண்ணாலே உன்னழகும்
வரிசையி லுள்ளோர் பார்க்கின்றார்
பாவி எனக்கோ வாய்க்கவில்லை!

கோபுர தரிசனம் காண வந்தால்
கூந்தல் தரிசனம் தருகின்றாய்!
மல்லிகை முல்லை சாதியுடன்
ஒற்றை ரோஜா மணக்கின்றாய்!
 
அர்ச்சகர் வந்தார், பெயர் கேட்டார்
அத்தனை பேரும் உனைப் பார்த்தார்
கைப்பை கொடுத்தாய், சீட்டையும் தான்,
‘கவிதா’ என்றாய் மென் குரலில்!
பூவனம் நடுவே பூத்தவளாய்
புவனம் காக்கும் அம்பாள் முன்
கவிதா என்றே பெயர் சொல்லி
மந்திரம் சொன்னார் அர்ச்சகரும்

கற்பூரத்தைக் கை ஒற்றி,
குங்குமம் ஏற்றுக் கைகூப்பி,
கண்கள் ஒருகணம் மூடுகிறாய்
கடவுளிடம் நீ வேண்டுகிறாய்!

குங்குமப் பொட்டலம் பெறுவதற்குள்
கும்பல் வந்து தள்ளிவிட
எங்கோ விழுந்தேன், பிரிந்து விட்டோம்
இன்னொரு கனவாய் நீ மறைந்தாய்!

வலப்புற மாக மூன்று தரம்,
நவக்கிர கத்திற்(கு) ஒன்பது மாய்
சுற்றிச் சுற்றி வருகின்றேன்
சொல்லாமல் நீ ஏன் போனாய்?

தெப்பக் குளம் தான் போனாயோ?
தெரிந்த வரையில் நீ யில்லை
செருப்புகள் வைக்கும் இடத்தி னிலும்
தேடிப் பார்த்தேன், காணவில்லை!

‘கவி தா’ என்றே கடவு ளிடம்
கடன்கேட் கத்தான் போயி ருந்தேன்
கவிதா அங்கே ஏன் வந்தாள்?
கால்கள் மிகவும் சோர்ந்து விட்டேன்

‘அண்ணா அண்ணா’ என்றபடி
அருகே வந்தாள் அச்சிறுமி.
தேங்காய், பூ, பழம் விற்றாளே,
தேடி எதையோ தருகின்றாள்:

“அம்மா சில்லறை தரும்போது
அவங்க கையில் நழுவி, அது
காசுடன் காசாய் என்பையில்
கலந்து விட்டது, இந்தாங்க”

என்றாள் சிறுமி. என் கரத்தில்
இட்டாள் அழகிய கணையாழி!
‘அம்மா’ என்றது கவிதாவை!
(அசடு, அவள் யார் நான் யாரோ?)

“ஆடி மாசம் வெள்ளி யிலே
அழகு மோதிரம் இல்லேன்னா
அம்மா கோவமா யிருப்பாங்க,
பாவம், சீக்கிரம் போய்க் கொடுங்க”

என்றாள் சிறுமி. நகர்ந்து விட்டாள்
ஏதும் கேட்க வழியில்லை
வியாபா ரத்தில் மூழ்கி விட்டாள்
வியந்தேன், ஏதும் புரியாமல்!

கவிதைக் கன்றோ நான் வந்தேன்
கணையா ழிக்கா நான் வந்தேன்?
கவிதா என்னும் கன்னியளைக்
கண்டு பிடித்தல் எங்ஙனமோ?

கார்கள் நிறுத்தும் இடமெல்லாம்
கவிதா என்றே தேடி நின்றேன்
பூக்கள், மணிகள், வளையல்கள்
புழங்கும் கடைகளில் நோட்டமிட்டேன்

இரவில் கதவு பூட்டும் வரை
இறைவன் கோவிலில் தானிருந்தேன்
மோதிரம் தேடி வருவாளோ?
மொத்த விழிகளும் கூட்டி நின்றேன்.

எங்கே போனாள் என் கவிதா?
எப்படிக் காண்பேன் இனி, அவளை?
முகத்தை அறிந்தேன் இல்லையே,
முதுகை யன்றோ நானறிவேன்!

யாரைக் கேட்டால் வழி பிறக்கும்?
(இணையமும் அன்று இல்லையே!)
நாள்தோறும் நான் கோவிலையே
நாற்பது தடவை சுற்றி வந்தேன்

அடிக்கடி கோவிலில் காண்பதினால்
அற நிலயத்துறை ஆளென்றே
அர்ச்சக ரெல்லாம் பணிகின்றார், 
அடியே னுக்கே முன்னு ரிமை!

கருவறை போயும் கண்ணிரண்டும் 
கன்னியர் மீதே செலுத்திடுவேன்
கடுத்தார்  சிலபேர், ஒரு பாட்டி
‘கல்யாண மாச்சா’ எனக் கேட்டார்!

ஆடியும் போச்சு, ஆவணி போய்
பங்குனி, சித்திரை வந்தாச்சு!
கவிதா, கவிதா என்பதிலே
கவிதையும் மறந்து போயாச்சு!

சின்னஞ் சிறிய மோதிரம் தான்
தினமும் என்முன் சிரிக்கிறது
இன்னொ ருத்தரின் பொருளென் றால்
என்ன மாய்த்தான் கனக்கிறது!

எங்கே உள்ளாய் கவிதா நீ?
இந்தக் கவிதையைப் படிப்பாயா?
கனவென் றாலும் வந்துவிடு:
இந்தா உந்தன் கணையாழி !
*****
 (c) Y.Chellappa
 
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


சனி, மார்ச் 30, 2013

கல்லில் வடித்த ஜடம் (கவிதை)

உன்னைச் சுற்றி ஓர் உலகம்
ஓயா ஓசையிடும்
ஒவ்வொரு நாளும் சோகக் கூக்குரல்
உன்செவி மீது விழும்
என்னைக் கொஞ்சம் பாராயோ என
ஏழையர் கூட்டம் வரும்
ஏதானாலும் தருவாய், ஊணோ
உடையோ என்று தினம்!
 
தீயில் வெந்தது வீடென்றே உடல்
தீய்ந்தவர் சிலபேரும்
தாயும் தந்தையும் சுனாமியாலே
தவறினர் என்பவரும்
தவற விட்டாள் எனைக் குப்பையிலென்று
தானழும் பேதையரும்
தடையில்லாமல் கல்விக்காகத்
தருவீர் என்பவரும்
 
சாலை சதுக்கம் மூலை முடுக்கம்
சந்துகள் தோறும் உனை
சந்திக்கிறார் நிந்திக்கின்றார்
ஞாபகம் வருகிறதா?
சாதாரணன் நான் என்கின்றாயா
சாதிக்க முடியாதா?
கைவிரல் பத்தும் கண்விழி இரண்டும்
மெய்யொன்றும் போதாதா?
 
ஐவர் உண்கையில் ஆறாமவர்க் கதில்
அன்னம் கிடையாதா?
அணிந்து கழற்றிய ஆடைகளேனும்
அளித்திட லாகாதா?
வறுமை கொடிது இளமையிலென்று
வாசகம் இருக்கிறதே!
வளமையில் கொஞ்சம் பங்கீடாக
வழங்குதல் கூடாதா?
 
சின்னச் சின்ன உதவிஎன்றாலும்
செய்வது நன்மை தரும்
சீக்கிரம் செய்தால் யாருக்கேனும்
நிச்சயம் வாழ்வு வரும்
காலம் உனக்கென நிற்பதில்லை அது
காற்றென கரைந்து விடும்
கண்டும் காணாமல் நிற்பாயேல் நீ
கல்லில் வடித்த ஜடம்!
 
-கவிஞர் இராய.செல்லப்பா
   
(c) Y.Chellappa
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


வெள்ளி, மார்ச் 29, 2013

என்ன பாடுவது? (கவிதை)

 
என்ன பாடுவது
எதனைப் பாடுவது?
எல்லாக் கவிஞனுக்கும்
ஏற்படுமோர் குழப்பமிது

மண்ணைப் பாடுவதா,
மனிதனைப் பாடுவதா ?

இங்கே நிலவுகிற
இழிவுகளைப் பாடாமல்
கண்ணெதிரே தோன்றும்
கயமைகளைச் சாடாமல்

கற்பனயில் மனம்மூடிக்
கனவுகளைப் பாடுவதா ?

சிரிக்கும் வைகறையை,
செவ்வந்தி வானத்தை,

மீளா இரவுகளில்
மின்மினிக்கும் விண்மீனை,

கத்தும் கடலினிலே
காலோடு கைநீட்டி

மூழ்கும் கதிரவனை,
முத்தமிடும் அலைநுரையை,

மேகக் கம்பளத்தில்
போர்த்திவரும் பிறைநிலவை

சில்லென்றிதழ் விரிக்கும்
சின்ன மலரை, அதில்

கன்னம் பதித்துக்
கள்ளுறிஞ்சும் பூச்சிகளை

வெள்ளை இறகு
விரிக்கும் கொக்குகளை

பாதையெலாம் படியும்
பனியழகை, பூங்காற்றை,

புல்லின் இதழில்
புரளும் நீர்முத்தை

கல்லிடையில் பூக்கும்
கள்ளிகளை, தாய்மரத்தைத்

தாங்கும் விழுதுகளை,
தரையினிலே புதைந்திருக்கும்

பொன்னை இரும்பைப்
பொக்கிஷத்தைப் பாடுவதா ?

என்ன பாடுவது
எதனைப் பாடுவது?
எல்லாக் கவிஞனுக்கும்
ஏற்படுமோர் குழப்பமிது !

-இராய. செல்லப்பா 
குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


வியாழன், மார்ச் 28, 2013

தேவை : நூலகங்களின் உருமாற்றம்

நியூஜெர்சியில் நாங்கள் குடியிருக்கும் பகுதியில் ஜான்சன் நூலகம் என்ற நூலகம் உள்ளது. ஏற்கெனவே மூன்று முறை நியூஜெர்சி வந்திருந்த போதிலும் இந்த நூலகத்திற்கு மட்டும் நான் போனதில்லை. இப்போதும் போகாமலேயே இருந்திருக்கலாம். எல்லாம் தலையெழுத்து, வேறென்ன?

குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெறப்போவதாக நூலகத்தின் வலைத்தளத்தில் கண்டோம். எனவே போனோம்.

தரைத் தளத்தில் சுமார் பத்தாயிரம் சதுர அடியில் இருந்தது நூலகம். பெரியவர்களுக்கான பிரிவில் விசாலமான மேஜைகள், வசதியான நாற்காலிகள், ஒவ்வொரு மேஜையிலும் இணைய இணைப்புடன் கணினி, மற்றும் பிரிண்டர்கள் இருந்தன. புத்தகங்களை அங்கேயே அமர்ந்து படிக்க மேலும் சில மேஜைகள் இருந்தன. ஆனாலும் எல்லாரும் கணினியோடு தான் கைகோர்த்துக் கொண்டிருந்தார்கள். மாணவர்கள் முதல் பேரறிஞர்கள் வரை அங்கே காண முடிந்தது. குறிப்பெடுக்கத் தாள்களும், பென்சில்களும், சிறுவர்களுக்குப் படம் வரைய கலர் பென்சில்களும் கிறுக்குத் தாள்களும் கேட்டதும் கொடுக்கிறார்கள்.

செவ்வாய், மார்ச் 26, 2013

கடலும் மலையும் எங்கள் கூட்டம் (கவிதை)

நாலு நாள் முன்பு
நடந்த செய்தி இது:

நண்பரொருவரை நாடினேன்,
அழைப்பிதழ் கொடுத்தேன்-

"பத்துக் கவிஞர்கள்
பாடுகிறார்கள்-வருக வென்றேன்.
மகிழ்ந்தார்.

"கவிஞர்களுக்கு
என்ன கொடுப்பீர்கள்" என்றார்.
அடுத்த முறை
எனக்கும் இடம் கொடுங்கள்"
என்றார்.
****

சிலரின் கேள்வியில்,
உள்ள சிந்தனையும்
ஓடி மறையும்.
சிலரது கேள்வியில், அது
வான் வரை விரியும்.

இவரின் வினா, என்
சிந்தையை விரித்தது....

ஞாயிறு, மார்ச் 24, 2013

விதி யாரை விட்டது? (3) (இறுதி)


இவ்வரிசையில் முந்தைய பதிவினைப் படிக்க:
விதி யாரை விட்டது-1
விதி யாரை விட்டது-2

அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆசிரியர்களுக்கான 'அரியர்ஸ்' போடும் வேலையில் என்னுடைய உதவி தேவைப்படுவதாகவும் சொரகொளத்தூரிலேயே இருக்கும்படியும் வைத்தி சார் கேட்டுகொண்டதால் என் ராணிப்பேட்டை விஜயம் அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.  

எட்டு மணிக்குச்  சரியாக வைத்தி சார் வந்தார்."நம்ம வீட்ல தான் இன்னிக்கி சாப்பாடு. அதனால, அடுப்பு மூட்டாதீங்க" என்றார். கூடவே தன் வீட்டிலிருந்து இட்லி சட்டினி மிளகாய்பொடி செட்டாக வரும் என்றார். வந்தது. என்ன தான் ரவீந்திரன் சார் நன்றாக சமைத்தாலும், இதிலிருந்த சுவை அதில் இல்லை. 

வெள்ளி, மார்ச் 22, 2013

விதி யாரை விட்டது? (2)

இவ்வரிசையில் முந்தைய பதிவினைப் படிக்க:
விதி யாரை விட்டது-1

தலைமை ஆசிரியர் அறையில் இப்போது நானும் குமரனும் ரவீந்திரனும் மட்டுமே  இருந்தோம். மற்றவர்கள் கிளம்பி விட்டிருந்தனர். என் முகத்தைப் பார்த்ததுமே புரிந்து கொண்டவரைப் போல, "என்ன, குமரனும் உங்களுடனே தங்க விரும்புகிறாராமே?" என்றார் தலைமை ஆசிரியர், அந்த விஷயத்தில் தனக்கு எந்த அக்கறையுமில்லை என்பது போல.

ரவீந்திரன் முந்திக்கொண்டு, "பாவம், நல்ல சாப்பாடு கிடைக்காதா என்று ஏங்குவது மனித சுபாவம் தானே" என்றார். பிறகு, அவரே அந்த வீட்டை வாடகைக்கு எடுத்தவர் போல, "எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. இவருக்கு சமைப்பதில் இன்னொரு பங்கு போல அவருக்கும் சமைத்துவிடுகிறேன்" என்றார்.

வியாழன், மார்ச் 21, 2013

விதி யாரை விட்டது? (1)

அன்று காலை வழக்கம் போல் ஐந்து மணிக்கே எழுந்து விட்டேன். அரை கிலோமீட்டர் நடந்து போய் மணியக்காரர் வயலில் காலை 
கடன்களைக் கழித்து விட்டு, புங்கங்குச்சியில் பல்துலக்கி, 
அண்ணாமலையின் பம்ப்பு செட்டில் சுடச்சுட பொங்கிவரும் 
நீர்வீழ்ச்சியில் ஆசை தீரும் வரை குளித்து விட்டு ஈர வேட்டியோடு திரும்பி வந்து கொண்டிருந்தேன்.   

என் வீட்டு வாசலில் ஒரு ஜீப்.சுமார் ஐம்பதுக்குமேல்  மதிக்கத் தக்க ஒருவர் இறங்கினார். அவருடைய சட்டையும் வேட்டியும் முகபாவமும் பார்த்தால் ஆசிரியர் போலத் தோன்றியது. "வணக்கம், என் பேர் ரவீந்திரன்" என்றார். வணக்கம் சொன்னேன்.

ஞாயிறு, மார்ச் 17, 2013

இரவு 12 மணிக்கு நடந்த சம்பவம் - 4 (இறுதி)

இவ்வரிசையில் முந்தைய பதிவினைப் படிக்க:
இரவு 12 மணிக்கு நடந்த சம்பவம்-1
இரவு 12 மணிக்கு நடந்த
சம்பவம்-2

இரவு 12 மணிக்கு நடந்த
சம்பவம்-3


திங்கட்கிழமை காலை. பள்ளியில் எனக்கு முதல் நாள். முதல் தொழிலில் முதன்முதலாய் நுழைகிறேன். பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் தருகிறேன், எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா என்று பிள்ளையாரை வேண்டினேன். ஆஞ்சநேயரையும் தான்.

தலைமை ஆசிரியர் வரும் வரையில் பள்ளியைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். மொத்தம் ஒன்பது வகுப்பறைகள். ஆசிரியர் அறை ஒன்று. மாணவர்களின் கட்டுரை நோட்டுக்கள், திருத்தப்பட்ட, படாத விடைத்தாள்கள், புத்தகங்கள் போன்றவை
ஐந்தாறு மர அலமாரிகளில் கிடந்தன.

சனி, மார்ச் 16, 2013

இரவு 12 மணிக்கு நடந்த சம்பவம் - 3


இவ்வரிசையில் முந்தைய பதிவினைப் படிக்க:
இரவு 12 மணிக்கு நடந்த சம்பவம்-1
இரவு 12 மணிக்கு நடந்த
சம்பவம்-2


'குமரன், குமரன்' என்று கூப்பிட முயல்கிறேன். ஆனால் என் குரல் எனக்கே கேட்க  மாட்டேனென்கிறது. கீழே பார்க்கிறேன். இதென்ன, குமரனின் பாய் காலியாக இருக்கிறது! எங்கே போனார்? அச்சத்தால் போர்வைக்குள் கால்களைக் குறுக்கிக் கொள்கிறேன்.

அந்த உருவம் மெல்ல ஓசையில்லாமல் என் தலை மாட்டில் வந்து, 'சார், நான் தான். எழுந்திருங்க' என்று சிணுங்குகிறது. நிச்சயம் மோகினிப் பேய் இல்லை. யாரோ ஒரு பெண் !

தீப்பொறியால் தாக்குண்டவன் போல்  கட்டிலில் இருந்து துள்ளிக்
குதித்தேன். வெளியே ஓடினேன். ஓடிக் கொண்டே இருந்தேன்...

வெள்ளி, மார்ச் 15, 2013

கண்ணதாசன் யாத்திரை






தம்பிக்கு மாலையிடும் அண்ணன் 
'மாலையிட்ட மங்கை' திரைப் படத்தில் வரும்

'சில்லென்று பூத்த  சிறு நெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி   நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள்  நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி  நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே'

என்ற பாடலை என்று கேட்டேனோ அன்று தான் எனக்குள்ளிருந்த கவிதை உணர்வு பீறிட்டுக் கிளம்பியது. இதை எழுதியவன்,
'நிரந்தரமானவன், அழிவதில்லை' என்று தமிழகமும் அன்றே பதிவு செய்தது.





புதன், மார்ச் 13, 2013

இரவு 12 மணிக்கு நடந்த சம்பவம் - 2



இவ்வரிசையில் முந்தைய பதிவினைப் படிக்க:
இரவு 12 மணிக்கு நடந்த சம்பவம்-1

கையிலிருந்த சுமைகளும், இருட்டும், மலைப் பாதையில் இருப்பதாகச் சொல்லப்படும் நரிகளும் என்ன செய்வதென்று புரியாத இக்கட்டான நிலைக்கு என்னைக் கொண்டு வந்து விட்டன. வேறு ஊராக இருந்தால் பஸ் நிற்கும் இடங்களில் ஒரு தேநீர்க் கடையாவது இருக்கும். ஒரு தேனீர் குடித்த மாதிரியும் இருக்கும். பேச்சுத் துணையும் இருக்கும். வேறு வழி இல்லை எனில் அந்த 

கடையிலேயே இரவைக் கழித்து விடலாம்.மருத்துவாம்பாடியில் அதுவும் இல்லை.

தேன்கனிக்கோட்டையில் ஏழாவது படித்துக் கொண்டிருந்த பொழுது காலையில் தினமும் பாலும் தயிரும் வாங்கக் காய்கறி அங்காடிக்குச் செல்வதுண்டு. ஓடி வா, ஓடி வா, பத்து பைசாவுக்குப் பத்து ரூபாய், ஓடி வா என்று  ஒருவன் கூவிக் கொண்டிருப்பான். அவன் முன்னால் தினத்தந்தி அளவுக்கு பெரிய பலகையில் ஸ்டாம்ப் மாதிரி நிறைய படங்கள் ஒட்டியிருக்கும். பத்து பைசா கொடுத்தால் ஒரு படம் கொடுப்பான். 'பிரித்து விடாதே' என்று அதட்டுவான். மீண்டும், ஓடி வா, ஓடி வா, பத்து பைசாவுக்குப் பத்து ரூபாய், ஓடி வா என்று கூவுவான். சுமார் பத்து அல்லது பன்னிரண்டு படங்கள் விற்றவுடன், திரும்பவும், ஓடி வா, ஓடி வா, பத்து பைசாவுக்குப் பத்து ரூபாய், ஓடி வா, கடைசி தரம், இதோ குலுக்கப் போகிறேன்  என்று உச்ச குரலில்  கூவுவான்.
மேலும் ஒன்றிரண்டு பத்து பைசாக்கள் சேரும்.

எல்லோரும் ஆவலாய்க்  காத்திருக்க, ஒரு பித்தளைச் செம்பில் ஒன்று இரண்டு போன்ற எண்கள் எழுதிய சிகரெட் அட்டைகளைப் போட்டு, தன் உள்ளங்கையால் மூடி, ஐந்தாறு தடவை தலை
கீழாகக் குலுக்கி, அந்தக் கூட்டத்திலேயே சிறுவனான ஒருவனை எடுக்கச் சொல்வான். உடனடியாக அந்த எண்ணை அறிவிக்காமல் அந்தப் பையனை ஏதோ குற்றம் செய்துவிட்ட மாதிரி சில நிமிடம் உற்றுப் பாத்துவிட்டு அதன் பிறகு தான் அறிவிப்பான். உடனே ஒவ்வொருவரும் தங்கள்
கையிலிருக்கும் படத்தைக் கிழித்து அதன் பின்னல் அந்த எண் 
இருக்கிறதா என்று ஆவலோடு பார்ப்பார்கள். அதிர்ஷ்ட எண் 
இருக்கும்  நபர், அங்கே கடை விரித்திருக்கும் பொருட்களில்
தனக்கு வேண்டிய ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். தேநீர் வடிகட்டி, சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி, ஷேவிங் ரேசர்,
ஒன்றாகச் சுற்றிய மூன்று சீப்புகள், ஐந்தாவது வகுப்பு மாணவர்கள் வரை அணியக் கூடிய பெல்ட்டு, பெண்களுக்கான பிளாஸ்டிக்
பொட்டு, ஐந்து கலர் ரிப்பன்கள், ஜெர்மன் வெள்ளியிலான
குங்குமச்  சிமிழ், ஆஞ்சநேயர், முருகன் படம், எம்.ஜி.ஆர்.-சரோஜாதேவி படம், போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட பொருட்கள் 
அங்கே இருக்கும்.

ஆர்வ மிகுதியால் ஒரு நாள் நானும் பத்து பைசா போட்டேன். அதிர்ஷ்ட எண்ணைக் குலுக்கும் வரை நெஞ்சில் 'திக் திக்' தான். பாட்டிக்கு என்ன பதில் சொல்வது என்று தான் கவலை. நல்ல வேளை, எனக்கே அன்று அதிர்ஷ்டம் விழுந்தது. ஆனால் எனக்குப் பிடித்தமான பொருள் ஒன்றுமே அங்கில்லை. எனவே ஆஞ்சநேயர் படத்தை எடுத்துக் கொண்டேன். நீல வண்ணத்தில், சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் ஆஞ்சநேயர் படம். எனக்கு ஒரே குஷி. பத்து ரூபாய் படம் பத்தே பைசாவுக்குக் கிடைத்ததென்றால் சும்மாவா? அதிலும் அஞ்சநேயரை மிகவும் வணங்கும்  
பாட்டியின் வாயை இந்த விஷயத்தை வைத்தே இன்னும் ஒரு மாதத்திற்குக் கட்டிப்போட்டு விடலாமே!

அப்படியே ஆயிற்று. 'என் தலைமாட்டில் வைத்துக் கொள்ள இந்த சைஸ் ஆஞ்சநேயர் படம் தான் வேண்டும் என்று நேற்றுக் கூட ஆசைப்பட்டேன். என் பிரார்த்தனை பலித்துவிட்டது' என்று பாட்டி சொல்லிக்கொண்டார். பள்ளியிலிருந்து நேரம் கழித்து வந்தாலும் சரி, அவர் தூங்கிக் கொண்டிருக்கையில் நாங்கள் பெருத்த இரைச்சலோடு விளையாடினாலும் சரி, பல  நாட்கள் வரை அவர் கோபிக்கவேயில்லை.

அந்த அஞ்சநேயரை இப்போது நினைத்துக் கொண்டேன், எனக்கு ஒரு வழி காட்டமாட்டாயா என்று. இல்லை, இல்லை, இந்த மலைப் பாதையைத் தவிர வேறு வழி  காட்ட மாட்டாயா என்று.

உண்மையில் ஆஞ்சநேயருக்கு சக்தி இருந்தது என்று தான் நினைக்கிறேன். அடுத்த சில நிமிடங்களில்  இரண்டு இளைஞர்கள் ஆளுக்கொரு சைக்கிளில்அங்கு வந்தனர். என்னைப் பார்த்து ஆச்சரியமாக, " யார் நீங்கள்? இந்த இருட்டில் சாமான்களுடன் நிற்கிறீர்கள்? எங்கு போக வேண்டும்?" என்று கேட்டனர். அது போதாதா எனக்கு, கடகடவென்று சொன்னேன். இரவுக்குள் சொரகொளத்தூர் போய்விட வேண்டும், உதவி செய்வீர்களா என்றேன்.

இருவரில் ஒருவர் பதின்வயதினர். பள்ளி மாணவர் போலிருந்தார். மற்றவருக்கு இருபத்தைந்து வயதிருக்கும். அவர் கலகலவென்று சிரித்துக்கொண்டே, "உதவி செய்யாவிட்டால் எப்படி? நாளை உங்கள் முகத்தில் தானே விழிக்கவேண்டும்?" என்றார். எனக்குப்  புரியவில்லை.

"கவலை வேண்டாம் சார்! என் பேர் குமரன். சொரகொளத்தூர் உயர்நிலைப் பள்ளியில் தான் நானும் ஆசிரியராக இருக்கிறேன். ஓவிய ஆசிரியர். உங்களைப் போல நானும் டென்-எ-ஒன் தான்! ஆனால் உங்களை விட ஒரு வருடம் சீனியர். ஏனென்றால் போன வருடம் திருப்பத்தூரில் டென்-எ-ஒன் னாக இருந்தேன். இங்கு வந்து பத்து நாள் தான் ஆகிறது. வீடு வாடகைக்கு எடுத்திருக்கிறேன். போளூரில் போய் வீட்டுக்கு வேண்டிய சாமான்கள் வாங்கி, நம்ம ஹெட்மாஸ்டர் நாகராஜன் சார் வீட்டில் வைத்து விட்டு இப்போது சொரகொளத்தூர் தான் போய்க் கொண்டிருக்கிறேன்" என்றார். "நீங்களும் போளூரிலேயே இறங்கி சார்  வீட்டிலேயே தங்கி இருக்கலாமே" என்றார்.

யாருக்கு இதெல்லாம் தெரியும்? பழைய சைக்கிளில் காலையும் மாலையும் கல்லூரிக்குப்  பத்து கிலோமீட்டர் போய் வந்ததும், மீதி இருந்த நேரங்களில் பெரும்பகுதி ராணிப்பேட்டை நூலகத்தில் 
கழித்ததும்,  நண்பர்கள் நடத்தும் கவியரங்கங்களுக்காகக் கவிதை எழுதுவதும் தவிர எனக்கு வேறு யாருமே  எதுவுமே  பழக்கமில்லையே!

"பரவாயில்லை, நம்மிடம் இரண்டு சைக்கிள் இருக்கிறதே! உங்கள் சாமான்களை அண்ணாமலையிடம்  கொடுங்கள். அவன் நம்ம 
ஸ்கூல் தான்.  ஒன்பதாவது படிக்கிறான்.  சூட்கேசுடன் என் பின்னால் உட்காருங்கள். டார்ச் லைட் இருக்கிறது. சைக்கிளில் 
டைனமோவும் ஒர்க்கிங் கண்டிஷன் தான். பயம் இல்லாமல்  
போகலாம்" என்றார், குமரன்.

இருந்தாலும் எனக்குச் சற்று தயக்கம். "ஆறு மைல் தூரம், மலைப் 
பாதை, குள்ள நரிகள் இருக்கும் என்றார்களே!"

"தெரியாதவர்கள் சொல்லியிருப்பார்கள். மலைப் பாதை என்று சொல்வதற்கில்லை. அங்கங்கே கொஞ்சம் மேடு பள்ளம் இருக்கும். பொதுவாக காட்டுப் பாதை. ஆனால் குள்ளநரிகள் கிடையாது. தூரமும் வெறும் ஐந்து கிலோமீட்டர் தான். சைக்கிளில் மாணவர்கள் நிறைய பேர் செல்வதால், பாதை நல்ல அகலமாக இருக்கும் " என்று ஆறுதலாகச் சொன்னார், குமரன்.

" புலி சிங்கம் கூட கிடையாது சார், பயப்படாதீங்க" என்று தன் பங்குக்குத் தைரியமூட்டினான், அண்ணாமலை.

மீண்டும் ஆஞ்சநேயருக்கு நன்றி சொன்னேன். 
 
சொரகொளத்தூரை அடையும் பொழுது மணி ஒன்பது ஆகிவிட்டது.
நல்ல இருட்டு, ஆனால் தெருவில் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. (அன்றைய தமிழ்நாடு!). நினைத்ததற்கு மாறாக நல்ல வளமான ஊராகவே இருந்தது. நிறைய கல்வீடுகள்.

குமரன்,  தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அண்ணாமலை சாமான்களை உள்ளே வைத்துவிட்டு, 'குட் நைட் சார்' என்று  கிளம்பினான். அப்போது தான் எனக்கு நிம்மதி ஆயிற்று. வீ ட்டுக்கு உடனே இது பற்றி எழுத வேண்டும்.

ஸ்டவ்வில் கொஞ்சம் பாலுடன் ஒரு அலுமினியக் குவளை 
இருந்தது. அதைக் காய்ச்சி இருவரும் குடித்தோம். பிஸ்கட்டும் 
வாழைப் பழமும் சாப்பிட்டோம்.

குடிசை வீடு தான். மஞ்சம்புல் வேய்ந்த கூரை. ஆனால் நல்ல 
கனமான சுவர்கள். அண்மையில் தான் வெள்ளை யடித்திருக்க வேண்டும். மின்வசதி இருந்தது. மூன்று மின்விளக்குகள், ஒரு 
மின்விசிறி. ஆனால் வெம்மை தாங்க முடியவில்லை.

"நான் கீழே பாயில் படுத்துக் கொள்கிறேன். நீங்கள் இந்த கட்டிலில் படுத்துக் கொள்ளுங்கள்" என்று கயிற்றுக் கட்டிலைக் காட்டினார் குமரன். இருந்த இரண்டு தலையணைகளில் ஒன்றை  எடுத்துக் கொண்டார்.

"பரவாயில்லை. நீங்கள் கட்டிலிலேயே படுங்கள். நான் பாயில் படுக்கிறேன்" என்று சொன்னாலும் அவர் கேட்கவில்லை. "ஒரு ராத்திரி மட்டும் தானே" என்றார்.

"இரவில் சிறுநீர் கழிக்க வெளியே போக வேண்டி இருக்கலாம். அதனால் கதவைத் தாளிட வேண்டாம். இங்கே திருடர் பயம் கிடையாது" என்று போர்த்திக் கொண்டார்.

"நாளை, ஞாயிற்றுகிழமை யல்லவா? சற்று  அதிகமாகவே தூங்குங்கள். பக்கத்தில் மணியக்காரரிடம் இதே போன்ற வீடு காலியாக இருக்கிறது. நீங்கள் கேட்டால்  மறுக்க மாட்டார்" என்றார்.

குமரனுக்கு நன்றி சொன்னேன். அவர் மட்டும் இல்லையென்றால்
இன்று இரவு எங்கே இருந்திருப்பேனோ! அசதியால் உடனே தூங்கிப் போனேன்.
*******

திடீரென்று ஏதோ சப்தம். பக்கத்தில் யார் வீட்டிலோ  பன்னிரண்டு அடித்தது. புரண்டு படுத்தேன். அந்த கும்மிருட்டிலும் கூரையில் ஒரு பல்லி தெரிந்தது. என்னையே பார்ப்பது போல் இருந்தது. கண்ணை  இறுக்கியபடி, விட்ட தூக்கத்தைத் தொடர முயன்றேன்.

அப்போது  தான் ......

ஏதோ ஓர் உருவம் வெளிக் கதவைத் திறந்துகொண்டு மெல்ல மெல்ல அடியெடுத்து கட்டிலின் அருகே வருகிறது. சுற்று முற்றும் பார்க்கிறது. 'உஷ்' என்கிறது. சிறிது தயக்கத்திற்குப் பின் போர்வையால் மூடியிருந்த என் கால்களை, கிள்ளுவது போல் மெல்ல வருடுகிறது. கையிலிருந்து வளைச் சத்தம் எழுகிறது. மெட்டி யோசையும் கூட.

அதிர்ந்து போனேன். மோகினிப் பிசாசுகளைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். அது தானோ?

(தொடரும்)

இவ்வரிசையில் அடுத்த பதிவினைப் படிக்க:
இரவு 12 மணிக்கு நடந்த
சம்பவம்-3

இரவு 12 மணிக்கு நடந்த
சம்பவம்-4



(c) Y.Chellappa.
email: chellappay@yahoo.com
 

மீண்டும் அமெரிக்கா - 2


ஆர்க்கிட் பூக்கள்  திருவிழா

2013 மார்ச் 12 - செவ்வாய்க்கிழமை யன்று  நியூயார்க் தாவரவியல் பூங்காவுக்குப் போக வேண்டுமென்று முதல் நாளே முடிவு செய்திருந்தோம். ஆனால் காலையிலிருந்தே மழை பொழிய ஆரம்பித்துவிட்டது. (சனி, ஞாயிறு, திங்கள் நல்ல வெயில் இருந்தது). கிளம்பும் போது பத்தே முக்கால் ஆகிவிட்டது. மழை நின்றபாடில்லை.

சென்னை மாதிரி, பத்து நிமிடம் மழை பெய்தாலே ஊரெங்கும் தண்ணீர், சாலையெங்கும் போக்குவரத்து நெரிசல் என்பதெல்லாம் இங்கு இல்லை. எவ்வளவு மழை வந்தாலும் நீர் உடனே வடிந்து விடுகிறது. எனவே காரோட்டிகளுக்குக் கவலையில்லை.

தாவரவியல் பூங்காவில் அன்று "ஆர்க்கிட் பூக்கள்" திருவிழா. பல்வேறு வகையான ஆர்க்கிட் பூக்கள், அமெரிக்கா மட்டுமின்றி வேறு நாடுகளிலிருந்தும் தருவிக்கப் பட்டிருந்தன. அழகான கண்ணாடி  மாளிகையில் கண்ணைக் கவரும் விதத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

(பூங்காவிலேயே ஆர்க்கிட் செடி வளர்ப்புக்கான தனி மாளிகை
இருந்தது). ஒவ்வொரு பூச்செடி அருகிலும்
அதன் பெயரும், தாவரவியல் பெயரும், அதிகம் வளரும் நாடுகளின் பெயர்களும்
சிறு அட்டையில் தரப்பட்டிருந்தன.

மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்வலர்கள் நிறைந்திருந்தனர். (நிகழ்ச்சிக்கு கட்டணம் உண்டு. அமெரிக்காவில் இலவசங்கள் குறைவு!) காமிராக்களும் விடியோக்களும்  'க்ளிக்'கிக்கொண்டே இருந்தன.

அரங்கத்தினுள் வெதுவெதுப்பாக இருந்ததால், வினயனை நடக்க விட்டோம். அவ்வளவு தான், விடைபெறும் வரை அவன் எங்களை நடப்பித்துக் கொண்டே இருந்தான் நானோ, விஜியோ, ஜார்ஜோ யாராவது ஒருவரின் இடது கைப் பெருவிரலை ஓடிபோய் பற்றிக்கொண்டு ஒரு தலைவன்
போல் அவனுக்குப் பிடித்தமான இடத்திற்குக் கூட்டிச் செல்வான். பெரும்பாலான சமயங்களில் கை பிடித்தவரை இடையிலேயே கைவிட்டு விடுவான். ஏனென்றால் வேறு ஏதாவதொரு காட்சி அவனை ஈர்த்து விடும்.   ஏராளமான பூக்களும், அரங்கிலிருந்த புத்தகக் கடையின் வண்ண வண்ண நூல்களும் அவன்

கவனத்தைத் திருப்பிக் கொண்டே இருந்ததால், புகைப்படம் எடுக்க சரியானபடி  முகம் கொடுக்க வில்லை, அவன்.

(நம்ம ஊர் சங்குப்பூவும் ஆர்க்கிட் வரிசையில் அங்கே இடம் பெற்றிருந்தது!)

 (ஆர்க்கிட் பூக்களைத் தான் 'சிங்கப்பூர் ரோஜா' என்று பூக்காரி ஜமுனா விற்கிறாள் என்ற புதிய தகவல் விஜியிடமிருந்து வந்தது).
 அநேகமாக எல்லாப் பூக்களையும் பார்த்து முடித்தபோது வெளியில் மழை சிறு தூறலாகத் தணிந்திருந்தது.
  வினயனோ வர மனமில்லாமல் அங்கிருந்த நீர்த் தொட்டியில் கைவிட முயன்று முடியாமல் எம்பிக் கொண்டே இருந்தான். கருப்பு சூட்டில் இளைஞர்கள் இளைஞிகள் மாலை நடக்கவிருந்த நன்கொடையாளர்களுக்கான நன்றி விழா ஏற்பாட்டில் முனைந்திருந்தார்கள்.
தாவரவியல் பூங்கா என்பது பல நூறு ஏக்கர் பரப்புள்ளது. சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலான சரித்திரம் கொண்டது. நெடிதுயர்ந்த மரங்கள் நிறைய இருந்தன. எனவே ஒரு நாளில் பார்த்து முடித்துவிடும் இடமல்ல. பார்வையாளர்களுக்கான
ரயில் இருந்தது. விளக்கம் தர

வழிகாட்டிகளும் உண்டு. தாவரவியல்
படித்தவரான விஜிக்கு ஒவ்வொரு பூக்களுமே குறைந்தது அரை மணி நேர கவனிப்புக்கு உரியதாகப் பட்டது. இதைப் பார்த்தீர்களா, அதைப் பார்த்தீர்களா என்று முடுக்கிகொண்டே இருந்தார்.
 


பார்த்த அனுபவத்தை விட இன்னும் பார்க்க முடிய வில்லையே என்ற ஏக்கம் அதிகமாக, மாலை ஆறு மணிக்கு  விடை பெற்றோம். மீண்டும் பார்த்தசாரதி யானார், ஜார்ஜ். நியூஜெர்சியை நோக்கியது பயணம்.
(c) Y.Chellappa.

குறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா?


செவ்வாய், மார்ச் 12, 2013

இரவு 12 மணிக்கு நடந்த சம்பவம் - 1

வேலூரிலிருந்த வேலை வாய்ப்பு அலுவலகம் இப்படியொரு இன்ப அதிர்ச்சி கொடுக்குமென்று கனவிலும் நினைக்கவில்லை நான்.

1970 மே மாதம் பி.எஸ்சி. தேர்வு எழுதியவுடன், மேல்விஷாரம் 
அப்துல் ஹக்கீம் கல்லூரியிலிருந்து காண்டக்ட் சர்டிபிகேட், டிரான்ஸ்பர் சர்டிபிகேட்டுடன்  சென்று பதிவு செய்து கொண்டேன். ஆச்சரியம் என்னவென்றால் எனக்கு ஏற்கெனவே தெரிந்த சில பெரியவர்களும் அங்கு பதிந்து கொண்டிருந்தது தான். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 'ரின்யுவல்' செய்ய வேண்டும், இல்லையென்றால் சீனியாரிட்டி போய் விடும் என்றார் என் சித்தப்பா போலிருந்த ஒருவர். பதினெட்டு வருஷமாக ரின்யுவல் செய்கிறாராம். மணமாகி இரண்டு பெண்கள். மூத்தவளுக்கு அடுத்த வாரம் திருமணமாம். அதற்குள் எதாவது வேலை கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு இருப்பதாகச் சொன்னார்.

வேலை வாய்ப்பு அலுவலக குமாஸ்தா எரிந்து விழுந்தார். 'என்னய்யா அவசரம் உங்களுக்கு? இன்னும் பி.எஸ்சி மார்க் லிஸ்ட்டே வரவில்லை, அதற்குள் வந்துவிட்டீர்கள்? அதைப் பதிவு செய்ய இன்னொரு முறை வருவீர்கள்.எனக்கு இரண்டு வேலை" என்று அலுத்துக் கொண்டார். கொண்டு போயிருந்த எஸ்.எஸ்.எல்.சி. புத்தகம், பி.யு.சி. மார்க் லிஸ்ட், பி.எஸ் சி க்கான டி.சி. எல்லாவற்றின் பின்புறமும் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அடித்து ('ஆஃபீஸ் ஸ்டாம்ப்')  தேதி போட்டார். 'இல்லாவிட்டால் நீங்கள் வேறொரு வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் இது போல பதிவு செய்து கொண்டு விடலாமே, அதை தடுக்கத் தான்' என்றார். எத்தனை இடங்களில் பதிவு செய்தாலும், வேலை கிடைத்தால் செய்யப் போவது நான் ஒருவன் தானே என்று நினைத்துக் கொண்டேன். கனமான ஒரு அட்டையில் என் பெயர் முகவரியை அவருக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் எழுதினர். (மொத்தம் நான்கு
ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள் தாம். பரவாயில்லை). அடுத்த 'டியூ டெட்' நவம்பர் மாதம் 15ஆம் தேதி என்றார். க்யூவிலிருந்து கழன்றேன்.

ரிசல்ட் வந்து,  புரொவிஷனல் சர்டிபிகேட் வாங்கி, மார்க் லிஸ்ட்டைப் பதிவு செய்ய மீண்டும்  வேலூர் போன போது அதே சித்தப்பாவை மீண்டும் பார்த்தேன். மகள் திருமணம் நன்றாக முடிந்ததாம். என்னுடைய மார்க் லிஸ்ட்டைப் பார்த்தார். டி-பிளஸ் வாங்கி இருக்கிறீர்களே, கங்கிராட்ஸ் என்றார். அப்பாவின் பெயர் விவரம் கேட்டார். இரண்டாவது பெண் இப்போது தான் பி.காம் பைனல் என்றார். 'வெரி சார்மிங் கர்ல். அப்பாவை வந்து
பார்க்கிறேன்' என்றார்.

அடுத்த பதினைந்தாவது நாளே எனக்கு வேலைக்கு ஆர்டர் வந்துவிட்டது என்றால் அது நம்பமுடியாத விஷயம் தானே!

கல்விக்கண் கொடுத்தவர் காமராஜர் என்பார்கள். அவருடைய ஆட்சிக் காலத்தில் தான் மாவட்டங்கள் தோறும் அரசு உயர்நிலைப் பள்ளிகள் ஏராளமாகத் தொடங்கப்பட்டன. நெ.து.சுந்தர வடிவேலு என்ற கல்வி அதிகாரிக்கு அளவற்ற சுதந்திரம் கொடுத்தார் காமராஜர். மனிதர்கள்  இல்லாத ஊர்களில் கூட பள்ளிக்கூடங்கள் முளைத்தன. அதிலும் எங்கள் வட ஆற்காடு மாவட்டத்தில் தான் தமிழ் நாட்டிலேயே அதிகமான உயர்நிலைப் பள்ளிகள் அமைந்தனவாம். அதன் விளைவாக, ஆசிரியர்களுக்கு பலத்த 'டிமாண்ட்'. அதிலும் என்னைப் போல கணிதம் படித்த பட்டதாரிகளுக்கு மிகவும் டிமாண்ட். பி.எட் படிக்காவிட்டலும் பரவாயில்லை என்று 'அன்ட்ரெயிண்டு' ஆசிரியர்களாக நியமித்து விடுவார்கள். கல்வித்துறையின் சட்டம் 10 (A )(i ) படி அந்த ஆணைகள் தரப்பட்டதால், இவர்களுக்கு டென்-ஏ -ஒன் என்றே பெயர் ஏற்பட்டது.

நான் கணிதத்தில் டி-பிளஸ் என்பதால் எனக்கு முதல் லிஸ்ட்டிலேயே டென்-ஏ-ஒன் கிடைத்து விட்டது. 'சொரகொளத்தூர்' என்ற ஊரில் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் எனக்கு வேலை நியமனம் ஆகியிருப்பதாகவும், ஒரு வாரத்திற்குள் சேராவிட்டால், அந்த ஆணை ரத்து ஆகிவிடும் என்றும் இருந்தது.

வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. சராசரிக்கும் கீழான குடும்பங்களில், முதல் பட்டதாரிக்குக் கிடைக்கும் முதல் வேலை எவ்வளவு நம்பிக்கையும் உற்சாகமும் கொடுக்கக்கூடியது என்று புரிந்தது.

அடுத்த காரியம், சொரகொளத்தூர் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பது தான். தபால் ஆபீசில் கேளுங்கள் என்றார் ஒருவர். திருவண்ணமலைக்கு அருகில் என்றார்கள். அடுத்த நாள், இன்னொருவர், நம்ம ஊர் ஹெட்மாஸ்டரை கேட்க  வேண்டியது தானே என்றார். சொரகொளத்தூர் என்பது, போளூருக்கும்
திருவண்ணாமலைக்கும் இடையில் இருக்கிறது என்று தெரிந்தது. போளூர், ஆரணிக்கு அருகில் என்பதும், ஆரணி, எனது ஊரான
ராணிப்பேட்டைக்கு ஒரு மணி தொலைவில் உள்ளதும்
ஏற்கெனவே தெரிந்திருந்ததால் கொஞ்சம் நிம்மதி. அதாவது, நான் போக வேண்டிய இடம், என் ஊரிலிருந்து சுமார் இரண்டரை மணி தூரத்தில் தான் உள்ளது, அதிகமில்லை என்ற நிம்மதி.

முதலில் நீ போய் ஊர் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு
அதன் பிறகு எங்கு தங்குவது என்று முடிவு  செய்யலாம்
என்றார் அம்மா. "பேரைக் கேட்டாலே கிராமம் மாதிரி இருக்கிறதே? போளூரில் தங்கி தினமும் பஸ்ஸில் போய் வர வேண்டியிருக்குமோ ?"

மேற்கொண்டு விவரங்கள் சேகரித்ததில், அந்த ஊரில் சில முதலியார்கள், அந்தணர்கள்   வீடுகள் இருப்பதாகவும், குறைந்த வாடகைக்கு வீடு கிடைக்கும் என்றும் தெரிந்ததால்
வாரம் ஒருமுறை ராணிப்பேட்டை வந்தால் போதும் என்றும் முடிவு செய்யப்பபட்டது.

சமைத்துச் சாப்பிடுவதற்கு சில பாத்திரங்கள், ஒரு பிளாஸ்டிக் வாளி, ஒரு கெரசின் ஸ்டவ், ரெண்டு படி அரிசி, கால்படி துவரம்
பருப்பு, தாளிக்க சிறிது கடலை-உளுத்தம் பருப்புகள், உப்பு, மிளகாய், சிறிய கடுகு ஒரு பொட்டலம், கொஞ்சம் உடைத்த
எல்.ஜி.பெருங்காயம் , சீரகம், வெந்தியம், துணிகளுக்காக கொடி
கட்டும் கயிறு, ஒரு ஊறுகாய் பாட்டில், சமையலின் போது கை துடைக்க ஒரு புடவை கிழிசல், சாமான் வாங்குவதற்கு
இரண்டு சணல் பைகள், இரண்டு பார் நீல துணி சோப்பு, ஒரு
லைப்பாய், மற்றும் இவற்றை கௌரவமாக எடுத்துப்  போவதற்கு 
இரண்டு புதுப் பைகள் இவையெல்லாம் தயாராயின.

ராணிப்பேட்டையிலிருந்து சனிக்கிழமை மதியம் புறப்படுவது என்றும், மூன்று மணி நேரத்திற்குள்ளாகவே சொரகொளத்தூர் வந்துவிடுவதால், வீடு பார்த்து அன்று இரவே சாவி வாங்கிக்கொண்டு விடலாம் என்றும்,  ஆனால் சனிக்கிழமை புது வீட்டில் குடி போகவேண்டாம், சாமான்களைப் பக்கத்து வீட்டில் 
வைத்துவிட்டு அவர்கள் வீட்டிலேயே தங்கி விட்டு, அடுத்த நாள் ஞாயிறு என்பதால் விசேஷமானது, புது வீட்டில் நுழையலாம் என்றும் திட்டமிடப் பட்டது.

அந்த நாளும் வந்தது. இரண்டு பெரிய பைகளில் மேற்படி சாமான்களும், புதிதாக வாங்கிய ஒரு சூட்கேஸில் எனது துணிமணிகள், சர்டிபிகேட்டுகளுமாக சொரகொளத்தூரை நோக்கி என் பயணம் தொடங்கியது.

திருவண்ணாமலை செல்லும் பஸ் கிடைத்தால் நேராக
சொரகொளத்தூருக்கே டிக்கெட் வாங்கிவிடலாம் என்று முயன்றேன். கையிலிருந்த இரண்டு மூட்டைகளையும் பார்த்த சில நடத்துனர்கள் விசில் கொடுக்காமலேயே போய் விட்டார்கள். சரி, இனி போளூர் வண்டியில் போய் அங்கிருந்து சொரகொளத்தூர் போகவேண்டியது தான் என்று அடுத்து வந்த போளூர் வண்டியில் ஏறினேன். கூட்டம் அதிகமில்லை. ஆனால் மனிதர்களைப்
பார்க்கும் போதெல்லாம் நின்று நின்று போனதால் போளூர்
சேரும் போது ஐந்து மணி ஆகிவிட்டது. கொஞ்சம் இருட்ட ஆரம்பித்துவிட்டது.

திருவண்ணாமலை வண்டியில் நல்ல கூட்டம். ஒருவழியாக ஏறி, 'சொரகொளத்தூர்' என்று  கேட்டேன். நடத்துனர் ஒரு மாதிரியாகப் பார்த்தார். 'மருத்துவாம்பாடி தானே' என்றார். இல்லீங்க, சொரகொளத்தூர்  என்றேன். முக்கால் ரூபாய் கொடுங்க என்றார்.
 
மருத்துவாம்பாடி வந்தது. நிறைய பேர் இறங்கினர். நடத்துனர் என்னைப் பார்த்து, 'இறங்குங்க' என்றார். 'இல்லை, நான் சொரகொளத்தூர்' என்றேன். 'அதான் இறங்குங்க' என்று வேகமாக விசில் கொடுத்தார். அடடா, சொரகொளத்தூருக்கு 
மருத்துவாம்பாடி என்று இன்னொரு பேர் இருக்கும் போல என்று எண்ணிக்கொண்டேன்.

இரண்டு மூட்டைகள், ஒரு சூட்கேஸ் சகிதம் மருத்துவாம்பாடியில் இறங்கிய போது மணி  ஆறு. நன்றாக இருட்டிவிட்டது. என்னைத் தவிர அங்கே ஒன்றிரண்டு பேர் தான் இருந்தார்கள். அவர்களும் பஸ் பிடிக்கும் அவசரத்தில் இருந்தார்கள். அருகில் எங்கும் ஊர் இருப்பதாகத் தெரியவில்லை. 'கலைஞர் அழைக்கிறார்' என்ற
போஸ்டரின் பாதிக்குக் கீழே மருத்துவாம்பாடி என்ற பலகை
மட்டும் நின்றது. வயிற்றில் புளி கரைத்தது. அருகில் இருந்தவரிடம்,  'ஹைஸ்கூலுக்கு வந்தேன், எந்த பக்கம்
போகணும்?' என்றேன்.

'ஹைஸ்கூலா? அதெல்லாம் இந்த ஊர்ல கிடையாதுங்களே. சின்ன கிளாஸ் பள்ளிக்கூடம் தான் இருக்குது. அதுக்கும் ஆறு மாசமா வாத்தியாரே கிடையாதுங்களே ' என்றார். 'சாரு  வாத்தியாருங்களா?'

பக்கத்தில் இருந்தவர் எனக்கு உண்மையிலேயே உதவி செய்யவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவராக இருந்தார். இருங்க யோசிச்சு சொல்றேன் என்றார். பிறகு நான் நின்றிருந்த திசைக்குப் பின் புறமாகக் கை காட்டினர். 'இப்படியே மலை மேலே ஆறு மைல் நடந்தீங்கன்னா ஒரு  ஊர்  வருங்க,  அங்க ஒரு ஹைஸ்கூலு இருக்குன்னு சொல்வாங்க' என்றார்.

முதலாமவர் வேகமாக, 'ஆமாங்க, கிருஷ்டினு ஊருங்க, ஆனா நல்ல பள்ளிக்கூடமுங்க. எல்லாம் கெணத்துப் பாசனம். நல்ல வெள்ளாமைங்க' என்றவர் மேலும் கொஞ்சம் யோசித்து, 'ஊரு சொரகொளத்தூர்னு சொல்லுவாங்க' என்றார்.

எனக்கு 'திக்' கென்றது. ஏற்கெனவே இருட்டிவிட்டது. கையில் இரண்டு மூட்டைகள்.ஒரு சூட்கேஸ். மலை மேல் ஆறு மைல் நடப்பதா? சின்ன வயதில் மூன்றாவது படிக்கும்போது அம்மூர் மலைக்கு 'எக்ஸ்கர்ஷன்' போனது தான் நான் மலையேறிய அனுபவம்.

'இங்கிருந்து சொரகொளத்தூருக்கு பஸ், கிஸ் எதுவும் கிடையாதா?' என்று பரிதாபமாகக் கேட்டேன். 'நீங்க ஒண்ணு ! வாடகை சைக்கிள் கூட கிடைக்காது' என்றார் தீர்மானமாக. மேலும் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் அவருடைய பஸ் வந்து விட்டது. அடுத்தவரும்
ஏறிவிட்டார்.

ஏறும்போது  என்னைக் கடைசி முறையாக அனுதாபமாகப் பார்த்து 
'எதற்கும் கவனமா  நடங்க. மல மேல நெறைய நரிகள் இருக்கும்னு சொல்லுவாங்க' என்றார்.

(தொடரும்)

இவ்வரிசையில் அடுத்த பதிவினைப் படிக்க:
இரவு 12 மணிக்கு நடந்த
சம்பவம்-2

இரவு 12 மணிக்கு நடந்த
சம்பவம்-3

இரவு 12 மணிக்கு நடந்த
சம்பவம்-4


************

(C) Y.Chellappa.
email: chellappay@yahoo.com